காமன்வெல்த் வட்டாரத்தில் சில வீடமைப்பு வளர்ச்சிக் கழக (வீவக) வீடுகளில் வசிப்போருக்கு நீர் விநியோகிப்பில் இடையூறு ஏற்பட்டது.
தேவைக்கேற்ப கட்டப்படும் வீவக வீடுகளுக்கான கட்டுமானப் பணிகள் நடந்துகொண்டிருந்தபோது நீர்க் குழாய் சேதமடைந்ததால் செவ்வாய்க்கிழமையன்று (செப்டம்பர் 24) சிறிது நேரத்துக்கு இப்பிரச்சினை எழுந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
சம்பவம் மாலை நேரம் நிகழ்ந்ததாக வீவக, பொதுப் பயனீட்டுக் கழகம் இரண்டும் செவ்வாய்க்கிழமை தனித்தனி ஃபேஸ்புக் பதிவுகளில் தகவல் வெளியிட்டன. தங்ளின் ஹால்ட் ரோடு வீவக புளோக்குகள் 89, 90, 91, காமன்வெல்த் டிரைவ் 47 முதல் 54 வரையிலான புளோக்குகள் உள்ளிட்டவற்றின் கீழ்த்தளங்களில் உள்ள வீடுகளுக்கான நீர் விநியோகிப்பில் பாதிப்பு ஏற்பட்டது.
பாதிக்கப்பட்ட குடியிருப்பாளர்களுக்கு நீர் விநியோகிக்கும் நடவடிக்கைகளை பொதுப் பயனீட்டுக் கழகம் மேற்கொண்டது. மேலும், கட்டுமானப் பணிகளை மேற்கொள்ளும், வீவகவுடன் இணைந்து செயல்படும் நிறுவனம் பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு போத்தல் நீரை வழங்கியது.
இரவு எட்டு மணிக்கு நீர் விநியோகிப்பு இயல்பு நிலைக்குத் திரும்பியதாகவும் பழுதுபார்ப்புப் பணிகள் தொடர்வதாகவும் பொதுப் பயனீட்டுக் கழகம் குறிப்பிட்டது.


