நெருக்கடி காலங்களிலும் மின்தடை ஏற்படும்போதும் அதை எதிர்கொள்வதற்கான குறிப்புகளையும் வழிகாட்டுதலையும் எரிசக்திச் சந்தை ஆணையம் வெளியிட்டுள்ளது.
வீடுகள், தனிமனிதர்கள்
நெருக்கடியான சூழலின்போது அவசர காலத்திற்கு எளிதில் பயன்படுத்தக்கூடிய பை ஒன்றை வைத்துக்கொள்வது நல்லது. அதில் முதலுதவிப் பெட்டி, மின்கலம் உள்ளிட்ட தேவையான பொருள்கள் இருக்க வேண்டும்.
அவசரச் சூழல்களில் உடனடியாக தொடர்புகொள்ள வேண்டிய எண்களை வைத்திருக்கவேண்டும். சூழலை முதலில் பொறுமையாக ஆராய வேண்டும்.
வீட்டில் இருக்கும் குளிர்பதனப் பெட்டியின் கதவு மூடியே இருக்கவேண்டும். மின்கருவிகள் செயல்பாட்டில் இருக்கக்கூடாது. எரிசக்திச் சந்தை ஆணையம், சிங்கப்பூர் மின்சாரக் குழுமம் ஆகியவற்றின் சமூக ஊடகப் பக்கங்கள் வழியாக மின்சார மறுசீரமைப்பு சார்ந்த தகவல்கள் பகிரப்படுவதைக் கண்காணிக்க வேண்டும்.
நிறுவனங்கள்
மின்தடை ஏற்பட்டால் அது தங்களுக்கு எத்தகைய ஆபத்தை விளைவிக்கும் என்பதை நிறுவனங்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட வழிகாட்டுதலின் துணைகொண்டு ஆராய வேண்டும்.
பாவனைப் பயிற்சிகளை அவ்வப்போது மேற்கொண்டால் மின்தடைச் சூழல்களின்போது ஊழியர்கள் அதற்குத் தக்கவாறு செயல்படுவதை அறிந்துவைத்திருப்பர்.
“சிங்கப்பூரில் மிகவும் நம்பகமான மின்கட்டமைப்பு உள்ளது. இருந்தாலும், பல காரணங்களால் மின்தடை ஏற்படலாம். இது போன்ற சூழல்களில் தயாராக இருப்பது நமக்கு உதவியாக இருக்கும்,” என்று எரிசக்திச் சந்தை ஆணையத்தின் நில, பாதுகாப்புத் திட்டமிடுதல் மூத்த இயக்குநரான யோ லை ஹின் கூறினார்.
கூடுதல் தகவல்களுக்கு https://go.gov.sg/power-outage-readiness என்ற இணையப்பக்கத்தை நாடலாம்.