வெளிநாட்டுக்குக் கொண்டு செல்லக்கூடிய மிக இன்றியமையாத பொருள்கள் நமது கைப்பேசியும் கடப்பிதழும்தான். ஆனால் இவை பறிபோனால் தனிநபர் தரவுகள் அம்பலமாகக்கூடும் அல்லது மின்னிலக்கப் பணப்பைகளில் உள்ள பணம் திருடப்படலாம்.
கடப்பிதழ்கள் தொலைந்துபோனது தொடர்பில் கடந்த ஆண்டில் மட்டும் 961 புகார்கள் கிடைத்ததாக குடிநுழைவு, சோதனைச்சாவடி ஆணையம் (ஐசிஏ) தெரிவித்துள்ளது.
அதனால் வெளிநாடு செல்லும் திட்டமிருந்தால் இந்தத் தகவல்களைச் சற்று அறிந்து வைத்துக்கொள்ளுங்கள்.
கடப்பிதழை நீங்கள் தொலைத்துவிட்டால் உடனே அருகிலுள்ள காவல் நிலையத்தில் புகார் அளியுங்கள். ‘பாஸ்போர்ட்’ அளவிலான இரு புகைப்படங்களைத் தயாராக வைத்துக்கொள்ளுங்கள். தற்காலிகப் பயண ஆவணத்திற்கு அவை தேவைப்படும்.
இத்துடன் ‘ஐசிஏ’ இணையத்தளத்தின்வழி கடப்பிதழ் தொலைந்தது குறித்துப் புகார் அளிக்க வேண்டும்.
கைப்பேசிக்கு முதலில் வலுவான ஒரு மறைச்சொல்லைத் தேர்ந்தெடுங்கள். முக அடையாளம் கொண்டு கைப்பேசியைச் செயல்படுத்தும் அம்சத்தையும் பயன்படுத்துங்கள்.
கைப்பேசி இருக்கும் இடத்தை அறிந்திட ‘Find My Device’, ‘Find My app’ போன்ற செயலிகளைப் பதிவிறக்கம் செய்வதுடன் உங்களுடன் பயணிக்கும் இன்னொருவரின் கைப்பேசியுடன் இணைப்பை ஏற்படுத்திக்கொள்ளுங்கள்.