பணிப்பெண்ணை வேலைக்குச் சேர்த்த ஒரு மாதத்திலேயே பலமுறை துன்புறுத்திய சந்தேகத்தின்கீழ் பணிப்பெண்ணின் முதலாளிமீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 30) 55 வயது ஹஸ்னா ஹஷிம்மீது தாக்குதல் தொடர்பில் ஐந்து குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
ஹஸ்னா, கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தனது பணிப்பெண்ணை அறைவது, கைப்பேசி கொண்டு தலையில் அடிப்பது, காதுகளைத் திருகுவது, தலைமுடியை இழுப்பது உள்ளிட்ட துன்புறுத்தல் செயல்களில் ஈடுபட்டதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
சிங்கப்பூரரான அவர் மார்சிலிங்கில் உள்ள வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீட்டில் வசிப்பவர் என்றும் நீதிமன்ற ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பணிப்பெண்ணை வீட்டில் அடித்ததோடு வாகனத்திலும் ஹஸ்னா துன்புறுத்தியதாகத் தெரிவிக்கப்பட்டது.
இந்த வழக்கு விசாரணை அக்டோபர் 28ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
பணிப்பெண்ணைத் துன்புறுத்தினால் ஆறு மாதம் வரையிலான சிறைத் தண்டனை, 10,000 வெள்ளி வரையிலான அபராதம் அல்லது இரண்டுமே விதிக்கப்படலாம்.