டிக்டாக் காணொளிகளில், ரகசியக் கும்பல் ஒன்றுக்குத் தொடர்பு இருப்பதைக் காட்டும் வகையில் கைசைகைகளைக் காட்டி, கும்பல் முழக்கங்களை வாசித்ததாகக் கூறப்படும் மாது மீது ஏப்ரல் 29ஆம் தேதியன்று குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
ரகசியக் கும்பல் உறுப்பினரைப் போல நடந்துகொண்டதாக 22 வயது நூர் ஷாஃபிகா அப்துல்லா மீது நான்கு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. அவர் அந்தக் குற்றச்செயல்களை 2023ல் பல்வேறு தருணங்களில் செய்ததாகக் குற்றஞ்சாட்டப்படுகிறது.
சென்ற ஆண்டு மே மாதம் அவர் செங்காங் வீடு ஒன்றில் இருந்தபோது, சமூக ஊடகத் தளத்தில் நேரலையில் கும்பல் முழக்கத்தை வாசித்ததாகக் கூறப்படுகிறது.
அதற்கு அடுத்த மாதம் அதே வீட்டிலிருந்து அதுபோன்ற மற்றொரு செயலைச் செய்ததாகவும் நூர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
ஜூலை நடுப்பகுதியில் ஈஸ்ட் கோஸ்ட் பூங்காவில் இருந்தபோது, அவர் ரகசியக் கும்பல் உறுப்பினர்களுக்குத் தொடர்புடைய கைசைகைகளைக் காட்டி, கும்பல் முழக்கம் ஒன்றை எழுப்பும் காணொளியைப் பதிவு செய்ததாகவும் கூறப்படுகிறது.
அதன் பிறகு, அந்தக் காணொளியை அவர் டிக்டாக் தளத்தில் பதிவேற்றம் செய்ததாக நம்பப்படுகிறது.
ஜூலை மாத இறுதியில், அவர் மீண்டும் அதுபோன்ற குற்றத்தை கிளார்க் கீயில் செய்ததாகக் கூறப்படுகிறது.
நூரின் வழக்கு மே 27ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. குற்றம் நிரூபிக்கப்பட்டால், ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும் அவருக்கு மூவாண்டுகள் வரை சிறைத் தண்டனையும் $5,000 வரை அபராதமும் விதிக்கப்படலாம்.