சிங்கப்பூரில் உள்ள தனியார்க் கல்வி நிலையம் ஒன்றில் தொடக்கப்பள்ளி மாணவர்களைத் துன்புறுத்திய ஆடவரின் உறவினரான பெண்மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
கல்வி நிலையத்தில் பயிலும் பிள்ளைகளைப் பாதுகாக்கத் தவறிய குற்றச்சாட்டை பெண் எதிர்கொள்கிறார்.
நீதிமன்றத்தின் ஒருங்கிணந்த வழக்கு நிர்வாகக் கட்டமைப்பின்படி, சனிக்கிழமை (ஆகஸ்ட் 22) பிள்ளைகள், இளையர் சட்டத்தின்கீழ் 46 வயது பெண்மீது இரண்டு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
பாதிக்கப்பட்ட பிள்ளைகளின் விவரங்களை ரகசியமாக வைத்திருக்க பெண்ணின் பெயரை வெளியிடக்கூடாது என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பெண்ணின் உடன்பிறப்பின் மகனான 31 வயதுச் சிங்கப்பூரருக்குப் பிள்ளைகளைத் துன்புறுத்தியது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளுக்கு இம்மாதம் 21ஆம் தேதி ஒன்பது ஆண்டுகள், 10 மாதச் சிறையுடன் எட்டுப் பிரம்படிகள் விதிக்கப்பட்டன.
2024ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் பதிவான குற்ற ஆவணத்தின்படி குற்றத்தை எதிர்கொள்ளும் ஆடவரின் உறவினரான பெண் சிங்கப்பூர் நிரந்தரவாசியான மலேசியர்.
பிள்ளைகள் துன்புறுத்தப்படுவது பற்றி தெரிந்திருந்தும் அந்தப் பெண் அதை அனுமதித்ததாகக் கூறப்படுகிறது.
பிள்ளைகளைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்கத் தவறிய குற்றத்தைப் பெண் எதிர்கொள்கிறார்.
தமது உடன்பிறப்பின் மகன் உடல்ரீதியாகப் பிள்ளைகளைத் துன்புறுத்தியதாகக் கூறியிருந்தபோதும் தொடர்ந்து அந்த ஆடவரின் பராமரிப்பில் பிள்ளைகளைப் பெண் விட்டுச் சென்றதாகக் கூறப்படுகிறது.
பெண்ணின் குற்றச் செயல்கள் 2023ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்துக்கும் மார்ச் மாதத்துக்கும் இடைப்பட்ட காலத்தில் நிகழ்த்தப்பட்டதாக நீதிமன்ற ஆவணங்கள் குறிப்பிட்டன.
பெண்ணின் வழக்குக்கு முந்தைய விசாரணை இம்மாதம் 26ஆம் தேதி நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கல்வி நிலையம் ஒன்றை நடத்திய பெண் மாணவர்களுக்கும் ஊழியர்களுக்கும் தங்கும் வசதிகளையும் வழங்கினார். வெளிநாட்டு மாணவர்களுக்கு நிர்வாக ஆலோசனை சேவைகளும் வழங்கப்பட்டன.
2016ஆம் ஆண்டு பெண்ணின் உடன்பிறப்பின் மகன், கல்வி நிலையத்தில் நிர்வாகியாக வேலை செய்ய பணியமர்த்தப்பட்டார். தங்கும் இடத்தில் தங்கியிருந்த மாணவர்கள் ஆடவரின் பராமரிப்பில் விடப்பட்டிருந்தனர்.
அங்கு, மாணவரைப் பல்வேறு விதங்களில் ஆடவர் துன்புறித்தினார்.


