காஸாவில் தொடரும் வன்முறையை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு உலக நாடுகள் முன்னுரிமை அளிக்கவேண்டும் என்று இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் கூறியுள்ளார்.
இந்திய- அரபு வெளியுறவு அமைச்சர்களுடனான கூட்டத்தில் கலந்துகொண்ட அவர், காஸாவில் மட்டுமல்ல, சூடான், லிபியா, லெபனான் ஆகியவற்றிலும் நீடிக்கும் வன்முறைக்கு முற்றுப்புள்ளி வைக்க இந்தியா ஆதரவளிப்பதாகக் குறிப்பிட்டார்.
லிபியா தொடங்கி, சூடான், காஸா ஆகிய அரபு நாடுகளில் நீடிக்கும் பூசல்கள் இந்தியா உள்பட அனைவரையும் பாதிப்பதாகச் சொன்னார் திரு ஜெய்சங்கர்.
“லிபியாவைப் பொறுத்தவரை தேசிய கலந்துரையாடலுக்கான நடவடிக்கைகளை அடுத்த கட்டத்திற்குக் கொண்டுசெல்வதில் கவனம் செலுத்தவேண்டும். சிரியாவில் தொடரும் போர் வட்டார அமைதியைக் கீழறுக்கிறது,” என்ற திரு ஜெய்சங்கர், நிலைத்தன்மை, அமைதி, செழிப்பு ஆகியவற்றுக்கான சக்தியை வலுப்படுத்தும்படி கேட்டுக்கொண்டார்.
இந்தியாவுக்கும் அரபு வெளியுறவு அமைச்சர்களுக்கும் இடையிலான இரண்டாவது கூட்டத்தில் லிபியா, ஓமன், பாலஸ்தீனம், சவூதி அரேபியா ஆகிய பல்வேறு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் கலந்துகொண்டனர்.


