எதிர்வரும் பொதுத் தேர்தல் தொடர்பில் ஒருவேளை முடிவெடுக்கும் உரிமை தமக்கு இருந்தால், சாதகமாக அமையக்கூடிய தொகுதியில் தாம் களமிறக்கப்படாமல் பார்த்துக்கொள்வேன் என்று பாட்டாளிக் கட்சியின் புதுமுகம் ஹர்பிரீத் சிங் கூறியுள்ளார்.
கடந்த 2023ஆம் ஆண்டிலிருந்து பாட்டாளிக் கட்சியினருடன் தொகுதி உலாக்களில் பங்கெடுத்துவரும் திரு சிங், இவ்வாண்டுப் பொதுத் தேர்தலில் போட்டியிடக்கூடும் என்று பரவலாக நம்பப்படுகிறது. அவர் மரின் பரேட்-பிரேடல் ஹைட்ஸ் குழுத்தொகுதியில் ஆக அதிகமாகக் காணபட்டுள்ளார். அதேவேளை, 59 வயது சிங், ஈஸ்ட் கோஸ்ட் குழுத்தொகுதியில் களமிறக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.
இல்லாவிடில், மூத்த வாக்கறிஞரன இவர், தனித்தொகுதி ஒன்றில் களமிறக்கப்படலாம் என்றும் சொல்லப்படுகிறது.
பாட்டாளிக் கட்சியின் ‘நட்சத்திர வேட்பாளராக’ (star catch) பார்க்கப்படும் திரு சிங், “நான் தெள்ளத் தெளிவாகக் கூறிவிட்டேன். சாதகமானதாகப் பார்க்கப்படும் எந்தத் தொகுதியிலும் களமிறக்கப்படுவதில் எனக்கு உடன்பாடில்லை. அந்த அணுகுமுறை எனது இயல்புக்கு மாறானது,” என்று கடந்த வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 11) நடந்த நேர்காணலில் விளக்கினார்.
‘ஆடன்ட் சேம்பர்ஸ்’ சட்ட நிறுவனத்தின் நிர்வாகப் பங்காளியான இவர், 2021ஆம் ஆண்டு பாட்டாளிக் கட்சியில் தொண்டூழியராகச் செயல்படத் தொடங்கினார். 2023ல் திரு சிங், கட்சி உறுப்பினராகச் சேர்ந்தார்.

