சிங்கப்பூரில் கிட்டத்தட்ட 24 மணி நேரமாக சிராங்கூன் சாலை முதல் தேங் ரோடு வரையில் பக்திப் பரவசம் மேலோங்கிய இவ்வாண்டின் தைப்பூசத் திருவிழா நிறைவை நாடுகிறது.
இறுதிக் காவடி இரவு 7.30 மணியளவில் ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் ஆலயத்திலிருந்து புறப்பட்டது. இரவு 10.30 மணி நிலவரப்படி சிராங்கூன் சாலை, வீராசாமி சாலைச் சந்திப்பு அருகில் அந்தக் காவடி சென்றுகொண்டிருந்தது.
இன்னும் சில மணி நேரங்களில் தேங் சாலை அருள்மிகு தெண்டாயுதபாணி ஆலயத்தைச் சென்றடைந்ததும் சாதனை படைத்த தைப்பூசத் திருவிழாவிற்கு விடைகொடுக்கப்படும்.
சிங்கப்பூரின் மிக முக்கியச் சமய விழாவாகவும் கலாசாரத் திருவிழாவாகவும் கொண்டாடப்படும் தைப்பூசத் திருவிழா, உலக அளவில் பேசப்படும் மரபுடைமைப் பெருவிழாவாகவும் கருதப்படுகிறது.
இரு கோயில்களுக்கும் இடையிலான 3.2 கிலோமீட்டர் தொலைவை நடந்து கடக்கும் பல்லாயிரக்கணக்கானோர் தங்கள் நேர்த்திக்கடனைச் செலுத்துவது மட்டுமல்லாமல் அவர்களுக்கு உற்சாகமூட்ட மேலும் பலர் பாதை நெடுகிலும் குழுமியிருப்பது கண்கொள்ளாக் காட்சியாக அமைகிறது.
இனம், சமயம், மொழி வேறுபாடின்றி நல்லிணக்கத்தைப் பறைசாற்றும் தேசிய நிகழ்ச்சியாகவும் விளங்குகிறது சிங்கப்பூர்த் தைப்பூசத் திருவிழா.
இறுதிக் காவடி நகர, அதன் பின்னர் துப்புரவுப் பணிகளும் சாலைத் தடுப்புகளை அகற்றும் பணிகளும் மேற்கொள்ளப்படுகின்றன.
வழக்கநிலைக்குத் திரும்புவதற்கு உரிய பணிகள் உடனடியாகத் தொடங்கப்பட்டுள்ளன.

