கத்தியால் தாக்கப்பட்ட இளையர், தமது தனிநபர் தகவல்கள் குறித்து காவல்துறையிடம் பொய் சொல்லியுள்ளார்.
தேசிய சேவைக்கு அந்த இளையர் பதிவு செய்யவில்லை. அதனால் பிரச்சினை ஏற்படும் என்று எண்ணிய அவர் காவல்துறையிடம் தவறான தகவல்களை வழங்கினார்.
தற்போது 20 வயதாகும் அமினின்மீது புதன்கிழமை (பிப்ரவரி 12) குற்றம் நிரூபிக்கப்பட்டது. அமினின் தம்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டார்.
அமினின் சிங்கப்பூர் ஆயுதப் படையின் மத்திய ஆள்பலத் தளத்தில் பதிய வேண்டும். ஆனால் அவர் அவ்வாறு செய்யவில்லை.
2023ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 6ஆம் தேதி 19 வயது அமினின் அமின் சாம் சைமன் நள்ளிரவு நேரத்தில் சில நபர்களைச் சந்தித்துள்ளார்.
முன்பு இருந்த பிரச்சினையைத் தீர்த்துக்கொள்ள அவர்கள் சந்தித்தனர். அப்போது மூன்று பேர் கொண்ட குழு அமினின்மீது தாக்குதல் நடத்தியது. அதில் இருவர் கத்தியைப் பயன்படுத்தினர்.
இதில் அமினின் காயமடைந்தார். சம்பவத்தை நேரில் பார்த்தவர் காவல்துறைக்கு தகவல் கொடுத்தார்.
தொடர்புடைய செய்திகள்
அதையடுத்து அங்கு வந்த அதிகாரி விசாரணை மேற்கொண்டார். அப்போது அமினின் தமது அடையாள அட்டை எண்களைத் தவறாகச் சொல்லியுள்ளார்.
அதன் பின்னர் அவர் சிகிச்சைக்காக தேசியப் பல்கலைக்கழக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அவருக்கு சிகிச்சையளித்த மருத்துவர்களிடம் அமினின் தவறான தகவல்களை மீண்டும் வழங்கினார்.
சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்டபோது அமினின் பொய் சொன்னது அம்பலமானது.
அமினினுக்கு ஏப்ரல் மாதம் தண்டனை விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.