ஒவ்வாமை, சளிக்காய்ச்சல் போன்ற பிரச்சினைகளுக்குப் பயன்படுத்தப்படும் ‘ஸர்டெக்-டி’ (Zyrtec-D) மருந்து இப்போது உற்பத்தி செய்யப்படுவதில்லை.
அதனால் சிங்கப்பூர் உட்பட பெரும்பாலான சந்தைகளில் ‘ஸர்டெக்-டி’ விற்கப்படுவதில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ‘ஸர்டெக்-டி’யைத் தயாரிக்கும் ஜிஎஸ்கே (GSK) மருந்து நிறுவனம் அதை உற்பத்தி செய்வதை நிறுத்தப்போவதாக எடுத்த முடிவு அதற்குக் காரணம்.
அம்மருந்தை இனி தயாரிக்கப்போவதில்லை என்று ஜிஎஸ்கே சென்ற ஆண்டு ஆகஸ்ட் மாதம் உலகளவில் சில்லறை வர்த்தகர்களிடமும் சுகாதாரப் பராமரிப்பு நிபுணர்களிடமும் தெரியப்படுத்தியது.
சளிக்காய்ச்சலுக்கு நிவாரணம் தர உதவும் சியூடோஃபெட்ரின் (pseudoephedrine) என்ற வேதிப்பொருள் ‘ஸர்டெக்-டி’யில் உள்ளது. அந்த வேதிப்பொருள் மற்ற பிரச்சினைகளை விளைவிக்கக்கூடியது என்ற அச்சம் நிலவுகிறது.
கண் பார்வைப் பிரச்சினைகள், தலைவலி, சிந்தனையில் பிரச்சினைகள் போன்றவை தலைதூக்கலாம். அப்பிரச்சினைகள் தலைதூக்கியவுடன் அடையாளம் கண்டால் வெற்றிகரமாக சிகிச்சை அளிக்கலாம்.
அதேவேளை, பக்கவாதத்துக்கு வரும் அறிகுறிகளைப்போல் தென்படுபவையும் தலைதூக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சியூடோஃபெட்ரின் பல்வேறு பெயர்களில் விற்கப்பட்டு வருகிறது. சுடாஃபெட், கொஞ்செஸ்டக்லியர், சியூடோகோட் (Sudafed, Congestaclear, Pseudocot) போன்ற பெயர்களில் விற்கப்படுகிறது. அத்தகைய மருந்து வகைகளில் ‘ஸர்டெக்-டி’யும் ஒன்று.

