பியூனஸ் அய்ரஸ்: உலகக் கிண்ணத்தை வென்று, தாய்நாட்டிற்குப் புகழ் சேர்த்த அர்ஜென்டினா அணித்தலைவர் லயனல் மெஸ்ஸிக்கு அந்நாட்டு மக்கள் பல வழிகளிலும் புகழ்மாலை சூட்டி வருகின்றனர்.
மெஸ்ஸியின் படத்தை உடலில் பச்சை குத்திக்கொள்வது, சுவரோவியமாக அவரது உருவத்தைத் தீட்டுவது போன்ற வழிகளில் அவர்கள் தங்களின் கதாநாயகனைக் கொண்டாடி வருகின்றனர்.
இந்த நிலையில், வானிலிருந்தும் மெஸ்ஸியின் முகத்தைப் பார்க்கும் வகையில், தமது சோளக்கொல்லையில் மெஸ்ஸியின் முகத்தை வடித்திருக்கிறார் அர்ஜென்டினா விவசாயி ஒருவர்.
கோர்டோபா மாநிலம், லாஸ் கோண்டோரசைச் சேர்ந்த மேக்சிமிலியானோ ஸ்பினாஸே என்ற அந்த விவசாயி, வளரும்போது மெஸ்ஸியின் முகத்தோற்றம் தெரியும்படி, கணினி வழிமுறையைக் கையாண்டு தமது வயலில் மக்காச்சோளம் விதைத்தார்.
இப்போது, வானிலிருந்து பார்க்கும்போது அவரது சோளக்கொல்லையில் மெஸ்ஸி முகங்காட்டுகிறார்.
“என்னைப் பொறுத்தவரை, மெஸ்ஸி வெல்ல முடியாதவராகத் திகழ்கிறார்,” என்றார் ஸ்பினாஸே.
“இப்போது அர்ஜென்டினா உலகக் காற்பந்து வெற்றியாளர். பயிர் நடவின்மூலம் அதனை வெளிப்படுத்த முடிந்ததில் எனக்கு மகிழ்ச்சி,” என்றும் அவர் சொன்னார்.
டியேகோ மரடோனா தலைமையில் 1986ஆம் ஆண்டு உலகக் கிண்ணம் வென்றிருந்த நிலையில், 36 ஆண்டுகளுக்குப் பிறகு மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா அணி கடந்த ஆண்டு கத்தாரில் நடந்த உலகக் கிண்ணப் போட்டியில் வெற்றியாளராக மகுடம் சூடியது.