ஜகார்த்தா: சீனாவைச் சேர்ந்த 17 வயது சாங் சிஜி என்னும் பேட்மிண்டன் வீரர் ஆட்டத்தின் போது உயிரிழந்த சம்பவம் விளையாட்டு உலகை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இந்தோனீசியாவின் யோக்ஜகார்த்தாவில் ஜூனியர் பிரிவுக்கான ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி ஜூன் 28ஆம் தேதி முதல் ஜூலை 2ஆம் தேதி வரை நடக்கிறது.
இதில் சாங் சிஜியும் கலந்துகொண்டார். ஜூன் 30ஆம் தேதி நடந்த ஆட்டத்தில் சாங் சிஜி ஜப்பானிய வீரர் கசுமா கவானோவை எதிர்த்து விளையாடினார்.
11-11 என்று ஆட்டம் இருந்த நிலையில் சாங் சிஜி திடீரென மயங்கி கீழே விழுந்தார். அதைத் தொடர்ந்து அவருக்கு மருத்துவ உதவி வழங்கப்பட்டது.
இருப்பினும் சாங் சிஜி இரவு 11.20 மணிக்கு உயிரிழந்ததாக ஆசிய பேட்மிண்டன் சங்கமும், இந்தோனீசிய பேட்மிண்டன் சங்கமும் கூட்டறிக்கை வெளியிட்டன.
சாங் சிஜி மயங்கி கீழே விழுந்த இரண்டாவது நிமிடத்தில் அவர் அவசர உதவி வாகனத்திற்கு கொண்டு செல்லப்பட்டார் என்றும் அவை தெரிவித்தன.
எதனால் சாங் சிஜி உயிரிழந்தார் என்பது குறித்த விவரங்கள் வெளியிடப்படவில்லை.
மார்ச் மாதம் நெதர்லாந்தில் நடந்த ‘டச் ஜூனியர் சாம்பியன்ஷிப்’ போட்டியில் சீனா வெற்றிபெற்றது. அந்த அணியில் சாங் சிஜி விளையாடினார்.

