உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டிகள் இன்னும் இரு வாரங்களுக்கும் குறைவான நாள்களில் தொடங்கவுள்ள நிலையில், ஆட்ட நேரத்தை வீணடிப்பதைத் தடுப்பதற்கும் ஆட்ட வேகத்தை நிலைநிறுத்துவதற்கும் நடுவர்கள் கடுமையான விதிமுறைகளைப் பின்பற்றுவார்கள் என்று அனைத்துலகக் காற்பந்துச் சம்மேளனம் தெரிவித்துள்ளது.
இதன்படி, நடுவர்களின் முடிவால் அதிருப்தி அடைந்து ஆட்டக்காரர் திடலைவிட்டு வெளியேறினால் அவருக்குச் சிவப்பு அட்டை காட்டப்படக்கூடும். மேலும், எதிரணி வீரருடன் மோதல் சூழல் ஏற்படும்போது, வாயை மூடிக்கொண்டு பேசும் வீரர்களுக்கும் சிவப்பு அட்டை காட்டப்படும் என்று அனைத்துலகக் காற்பந்துச் சம்மேளனம் (ஃபிஃபா) தெரிவித்துள்ளது.
‘கோல் கிக்’, ‘துரோ இன்’ போன்றவற்றின்போது நடுவர்கள் ஐந்து வினாடிகள் அவகாசம் கொடுப்பர். அதற்குள் ஆட்டத்தைத் தொடங்கத் தவறினால், எதிரணிக்குக் கார்னர் வாய்ப்பு அல்லது ‘துரோ இன்’ வாய்ப்பு வழங்கப்படும்.
மாற்று ஆட்டக்காரர்கள் திடலுக்கு வர ஆட்டத்தின்போது வெளியேறும் வீரர்கள் 10 வினாடிகளுக்குள் திடலைவிட்டு வெளியேற வேண்டும். காயம் அல்லது பாதுகாப்புச் சிக்கல்கள் போன்ற சூழல்களுக்கு மட்டுமே கூடுதல் நேரம் அனுமதிக்கப்படும்.
இவற்றுடன், காணொளி உதவி நடுவர் முறையும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. தவறான இரண்டாவது மஞ்சள் அட்டை, அடையாளக் குழப்பத்தால் வழங்கப்படும் அட்டைகள் மற்றும் தவறாக அளிக்கப்பட்ட கார்னர் வாய்ப்புகள் ஆகியவற்றைச் சரிபார்க்க இனி காணொளி உதவி நடுவர் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும் என்று ஃபிஃபா அறிவித்துள்ளது.

