தென்கிழக்காசிய தேசிய காற்பந்து அணிகளுக்கான இவ்வாண்டின் ஆசியான் கிண்ணப் போட்டி அரையிறுதிச் சுற்றில் வியட்னாமைச் சந்திக்கவுள்ளது சிங்கப்பூர்.
இச்சுற்றில் இரு அணிகளும் இருமுறை மோதும். முதல் ஆட்டம் சிங்கப்பூரின் ஜாலான் புசார் விளையாட்டரங்கில் நடைபெறும்.
அதற்கான நுழைவுச்சீட்டுகள் கடந்த ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 22) விற்பனைக்கு விடப்பட்டன. விற்பனைக்கு விடப்படுவதற்கு 16 மணி நேரத்துக்கு முன்னரே நுழைவுச்சீட்டுகளை வாங்க ஜாலான் புசார் விளையாட்டரங்கில் காத்திருந்தனர் பல ரசிகர்கள்.
ஞாயிற்றுக்கிழமையன்று ஜாலான் புசார் விளையாட்டரங்கில் காணப்பட்ட நீளமான வரிசை, 1970கள் முதல் 90கள் வரை சிங்கப்பூரைக் கவ்விய உள்ளூர் காற்பந்து மோகத்தை நினைவூட்டியது. ஞாயிற்றுக்கிழமை மாலை 6.20 மணிக்குள் 5,375 நுழைவுச்சீட்டுகள் விற்று முடிந்தன.
வரும் வியாழக்கிழமையன்று (டிசம்பர் 26) சிங்கப்பூருக்கும் வியட்னாமுக்கும் இடையிலான ஆசியான் கிண்ணப் போட்டியின் அரையிறுதிச் சுற்று ஆட்டம் நடைபெறும்.

