ஏஎஃப்சி ஆசியக் கிண்ணப் போட்டிகளுக்கான இறுதி தகுதிச்சுற்று ஆட்டத்தில் சிங்கப்பூர் பங்ளாதேஷை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது.
ஆட்டம் செவ்வாய்க்கிழமை (மார்ச் 31) இரவு 8 மணிக்குத் தேசிய விளையாட்டரங்கில் நடந்தது.
ஆட்டத்தின் 32வது நிமிடத்தில் சிங்கப்பூர் தனது முதல் கோலை அடித்தது. ஹாரிஸ் ஸ்டீவார்ட் (Harhys Stewart) தனக்குக் கிடைத்த வாய்ப்பைக் கோலாக மாற்றினார்.
பங்ளாதேஷ் வீரர்கள் சிங்கப்பூர் அணிக்குக் கடுமையான சவால் கொடுத்தனர். இருப்பினும், கிடைத்த ஒரு சில வாய்ப்புகளை அவர்கள் தவறவிட்டனர்.
சிங்கப்பூரின் தற்காப்பை உடைக்க முடியாமல் திணறிய பங்ளாதேஷால் கோல் ஏதும் போட முடியவில்லை.
ரசிகர்கள் உற்சாகம்
இந்த ஆட்டத்தை 30,105 ரசிகர்கள் நேரில் கண்டுகளித்தனர்.
இரண்டு அணி ரசிகர்களும் வீரர்களை உற்சாகமூட்டும் விதமாகத் தொடர்ந்து ஆரவாரம் செய்தனர். குறிப்பாக, பங்ளாதேஷ் ரசிகர்கள் அரங்கத்தை அதிரவைத்தனர்.
சிங்கப்பூர் அணி, 2027ஆம் ஆண்டு சவூதி அரேபியாவில் நடக்கவுள்ள ஆசியக் கிண்ணப் போட்டிக்கு ஏற்கெனவே தகுதிபெற்றுவிட்டது. இந்த ஆட்டம் சிங்கப்பூருக்கு நல்ல பயிற்சியாக அமைந்தது.
தொடர்புடைய செய்திகள்
ஆட்டம் தொடங்குவதற்கு முன்னரும் ஆட்டத்தின் இடைவெளியிலும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் நடந்தன.

