கேன்சஸ் சிட்டி: இவ்வாண்டின் உலகக் கிண்ணப் போட்டியின் ‘ஜே’ பிரிவு ஆட்டத்தில் அல்ஜீரியாவை 3-0 எனும் கோல் கணக்கில் வென்றது போட்டியின் நடப்பு வெற்றியாளரான அர்ஜென்டினா.
ஆட்டத்தின் மூன்று கோல்களையும் போட்டார் நட்சத்திர ஆட்டக்காரர் லயனல் மெஸ்ஸி. உலகக் கிண்ணப் போட்டியின் ஆட்டம் ஒன்றில் மெஸ்ஸி மூன்று கோல்களைப் போட்டிருப்பது இதுவே முதல்முறையாகும்.
ஹாலண்ட் அபாரம்
‘ஐ’ பிரிவு ஆட்டத்தில் ஈராக்கை 4-1 எனும் கோல் கணக்கில் வீழ்த்தியது நார்வே.
உலகக் காற்பந்தில் ஆகச் சிறந்த வீரர்களில் ஒருவராகக் கருதப்படும் எர்லிங் ஹாலண்ட் நார்வேக்கு இரண்டு கோல்களைப் போட்டார்.
லியோ ஒஸ்டிகார்ட், நார்வேயின் மூன்றாவது கோலைப் போட்டார். அய்மன் ஹுசெய்ன் சொந்த வலைக்குள் பந்தை அனுப்பியதால் ஆட்டம் முடியவிருக்கும் நேரத்தில் நார்வேக்கு நான்காவது கோல் விழுந்தது.
முன்னதாக நார்வே 1-0 எனும் கோல் கணக்கில் முன்னணியில் இருந்தபோது ஹுசெய்ன் கோல் எண்ணிக்கையைச் சமப்படுத்தினார்.
செனகலை வென்றது பிரான்ஸ்
முன்னதாக நடந்த மற்றோர் ‘ஐ’ பிரிவு ஆட்டத்தில் பிரான்ஸ், செனகலை 3-1 எனும் கோல் கணக்கில் வென்றது. அந்த ஆட்டத்தில் மற்றொரு உலகக் காற்பந்து நட்சத்திரமான கிலியோன் இம்பாப்பே இரண்டு கோல்களைப் போட்டார்.
செனகல் விட்டுக்கொடுக்காமல் விளையாடியபோதும் பிரான்சின் சிறப்பான விளையாட்டுக்கு அந்த அணியால் ஈடுகொடுக்க முடியவில்லை.
ஆட்டத்தின் 66வது நிமிடத்தில் பிரான்சை முன்னுக்கு அனுப்பினார் இம்பாப்பே. பிறகு 82வது நிமிடத்தில் பிராட்லி பார்க்கோலா பிரான்சின் இரண்டாவது கோலைப் போட்டார்.
பின்னர் ஆட்டம் 90 நிமிடங்களைத் தாண்டிய பிறகு செனகலின் இப்ராகிம் இம்பாயி ஒரு கோலைப் போட்டார். ஆனால், அதற்குப் பிறகும் மேலும் ஒரு கோல் போட்டு பிரான்சின் வெற்றியை உறுதிப்படுத்தினார் இம்பாப்பே.
ஆஸ்திரியாவுக்கு வெற்றி
ஆஸ்திரியா, 36 ஆண்டுகளில் முதன்முறையாக உலகக் கிண்ணப் போட்டியின் ஆட்டம் ஒன்றில் வெற்றிபெற்றுள்ளது.
‘ஜே’ பிரிவில் ஜோர்தானை 3-1 எனும் கோல் கணக்கில் வென்றது ஆஸ்திரியா.
ஜோர்தான் முதன்முறையாக உலகக் கிண்ணப் போட்டியில் பங்கேற்கிறது. ஆட்டத்தில் தோற்றிருந்தாலும் போட்டியில் தனது முதல் கோலைப் போட்டுள்ள மகிழ்ச்சி அந்த அணிக்குக் கிட்டியது.

