சிங்கப்பூர் பிரிமியர் லீக்கில் பிஜி தெம்பனிஸ் ரோவர்ஸ் காற்பந்துக் குழுவுக்காக விளையாடிவரும் கியோகா நாக்கமுரா, 28, சிங்கப்பூர் குடியுரிமை பெற்றுள்ளார்.
சிங்கப்பூரராக தாம் உறுதிமொழி எடுத்துக்கொண்டதாக வெள்ளிக்கிழமை (அக்டோபர் 25) இன்ஸ்டகிராமில் பதிவிட்ட அவர், இது தமக்கு “உணர்வுபூர்வமான தருணம்” என்றார்.
“ஒருவழியாக சிங்கப்பூரரானதில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். நம் நாட்டிற்கும் நம் காற்பந்து அணிக்கு இனி என்னால் முடிந்த அளவு பங்களிக்க நான் முற்படுவேன்,” என்றார் அவர்.
அல்பிரேக்ஸ் நிகாட்டா குழுவுக்காக விளையாட 2019ல் சிங்கப்பூருக்கு வந்த நாக்கமுரா, சிங்கப்பூர் குடியுரிமை பெற்றுள்ள முதல் ஜப்பானியக் காற்பந்து வீரராவார்.
சிங்கப்பூர் குடியுரிமை நாக்கமுரா வசமான நிலையில், டிசம்பர் 8 முதல் ஜனவரி 5 வரை ஏஎஃப்எஃப் வெற்றியாளர் கிண்ணப் போட்டியில் களமிறங்கும் சிங்கப்பூர் காற்பந்து அணி, அவரின் செயல்பாட்டை அதிகம் சார்ந்திருக்கும்.
அப்போட்டியில் ‘ஏ’ பிரிவில் இடம்பெற்றுள்ள சிங்கப்பூர், நடப்பு வெற்றியாளர் தாய்லாந்து, கம்போடியா, மலேசியா, தீமோர்-லெஸ்டே ஆகிய அணிகளுடன் பொருதும்.
சிங்கப்பூர் அணிக்காக விளையாட நீண்டகாலமாக ஆசைப்பட்ட நாக்கமுராவுக்கு, செப்டம்பர் 1ஆம் தேதி சிங்கப்பூரில் இரண்டாவது குழந்தையாகப் பெண் குழந்தை பிறந்தது.