அர்லிங்டன்: அர்ஜென்டினாவின் நட்சத்திர ஆட்டக்காரர் லயனல் மெஸ்ஸி இரண்டு கோல்களைப் புகுத்தித் தமது அணியை அடுத்து சுற்றுக்கு இட்டுச் சென்றுள்ளார்.
டெக்சஸ் மாநிலத்தின் அர்லிங்டன் நகரில் நடைபெற்ற ‘ஜே’ பிரிவின் முதல் சுற்று ஆட்டத்தில் அர்ஜென்டினா 2-0 எனும் கோல் கணக்கில் ஆஸ்திரியாவை வீழ்த்தியது.
காற்பந்து வரலாற்றில் ஆகச் சிறந்த விளையாட்டாளர் ஒருவராகக் கருதப்படும் மெஸ்ஸி, ஆட்டத்தின் 38வது நிமிடத்தில் அணியின் முதல் கோலைப் போட்டு வரலாறு படைத்தார்.
உலகக் கிண்ணத்தில் ஆக அதிகமாக 16 கோல்களை அடித்திருந்த ஜெர்மனியின் மிரோஸ்லாவ் குளோசவின் சாதனையை இதற்கு முன்னர் அல்ஜீரியாவுடன் மோதிய ஆட்டத்தில் மெஸ்ஸி சமன்செய்திருந்தார்.
அதை இப்போது அவரே விஞ்சிவிட்டார். ஆஸ்திரியாவுக்கு எதிரான ஆட்டத்தில் புகுத்திய முதல் கோல், உலகக் கிண்ணத்தில் அவரின் 17வது கோல்.
ஆட்டத்தின் கூடுதல் நேரத்தில் மேலும் ஒரு கோலைப் போட்டு அர்ஜென்டினாவின் வெற்றியை உறுதிசெய்ததோடு உலகக் கிண்ணப் போட்டிகளில் தமது கோல் எண்ணிக்கையையும் 18க்கு உயர்த்தியுள்ளார் அணித் தலைவருமான மெஸ்ஸி.
‘ஜே’ பிரிவின் இன்னோர் ஆட்டத்தில், அல்ஜீரியா, 2-1 எனும் கோல் எண்ணிக்கையில் ஜோர்தானை வென்றது. இந்த ஆட்டத்தில் தோல்வியுற்றதால் ஜோர்தானின் அடுத்த சுற்றுக் கனவு முடிவுக்கு வந்தது.
ஃபிலடெல்ஃபியாவில் நடைபெற்ற ‘ஐ’ பிரிவு ஆட்டமொன்றில், பிரான்ஸ், 3-0 எனும் கோல் கணக்கில் ஈராக்கை வெற்றிகண்டது.
தொடர்புடைய செய்திகள்
கிலியன் இம்பாப்பே இரண்டு கோல்களைப் போட்டார். அந்த கோல்கள் ஆட்டத்தின் 14வது நிமிடத்திலும் 54வது நிமிடத்திலும் வந்தன.
ஆட்டத்தின் 66வது நிமிடத்தில் உஸ்மான் டெம்பெலே தம் பங்கிற்கு ஒரு கோலை அடித்தார். இந்த வெற்றியால் பிரான்சும் அடுத்த சுற்றுக்கு முன்னேறுவது உறுதியாகியிருக்கிறது.
‘ஐ’ பிரிவின் மற்றோர் ஆட்டத்தில், நார்வே, 3-2 எனும் கோல் எண்ணிக்கையில் செனகலைத் தோல்வியுறச் செய்தது.

