அர்லிங்டன்: உலகக் கிண்ண வரலாற்றில் அதிக கோல்களை அடித்த பெருமையைப் பெற்றுள்ளார் அர்ஜென்டினாவின் நட்சத்திர ஆட்டக்காரர் லயனல் மெஸ்ஸி.
டெக்சஸ் மாநிலத்தின் அர்லிங்டன் நகரில் நடைபெற்ற ஆஸ்திரியாவுக்கு எதிரான ‘ஜே’ பிரிவின் முதல் சுற்று ஆட்டத்தில் அவர் உலகச் சாதனையை நிகழ்த்தினார்.
அர்ஜென்டினா 2-0 எனும் கோல் கணக்கில் ஆஸ்திரியாவை வீழ்த்தியது. ஆட்டத்தின் இரண்டு கோல்களையுமே புகுத்தியவர் மெஸ்ஸி. அந்த வெற்றியின் மூலம் தமது அணியை அடுத்து சுற்றுக்கு அவர் இட்டுச் சென்றார்.
காற்பந்து வரலாற்றில் ஆகச் சிறந்த விளையாட்டாளர்களில் ஒருவராகக் கருதப்படும் மெஸ்ஸி, ஆட்டத்தின் 38வது நிமிடத்தில் அணியின் முதல் கோலைப் போட்டு வரலாறு படைத்தார்.
உலகக் கிண்ணத்தில் ஆக அதிகமாக 16 கோல்களை அடித்திருந்த ஜெர்மனியின் மிரோஸ்லாவ் குளோசவின் சாதனையை இதற்கு முன்னர் அல்ஜீரியாவுடன் மோதிய ஆட்டத்தில் அவர் சமன்செய்திருந்தார்.
அதை இப்போது அவரே விஞ்சிவிட்டார். ஆஸ்திரியாவுக்கு எதிரான ஆட்டத்தில் புகுத்திய முதல் கோல், உலகக் கிண்ணத்தில் அவரின் 17வது கோல்.
ஆட்டத்தின் கூடுதல் நேரத்தில் மேலும் ஒரு கோலைப் போட்டு அர்ஜென்டினாவின் வெற்றியை உறுதிசெய்ததோடு உலகக் கிண்ணப் போட்டிகளில் தமது கோல் எண்ணிக்கையையும் 18க்கு உயர்த்தியுள்ளார் அணித் தலைவருமான மெஸ்ஸி.

