சிட்னி: உலகக் கிண்ண காற்பந்துப் போட்டியில் தமிழ் வம்சாவளில் வந்த நிஷான் வேலுப்பிள்ளை விளையாடவுள்ளார். அவர் ஆஸ்திரேலிய அணியில் இடம்பெற்றுள்ளார்.
இதன்மூலம் ஆண்களுக்கான உலகக் கிண்ண காற்பந்துப் போட்டியில் விளையாடும் முதல் தமிழ் வம்சாவளி என்னும் பெருமை நிஷானுக்குக் கிடைத்துள்ளது.
நிஷானின் தந்தை சசிநாத் வேலுப்பிள்ளை இலங்கைத் தமிழர் ஆவார். தாயார் ஆங்கிலோ இந்தியர். நிஷான் மெல்பர்னில் பிறந்து வளர்ந்தவர்.
நிஷான் (25), ஆஸ்திரேலியாவின் ஏ-லீக் குழுவான மெல்பர்ன் விக்டரி குழுவிற்கு விளையாடி வருகிறார்.
திடலில் முன்கள வீரராக விளையாடும் நிஷான் கோல் அடிப்பதில் சிறப்பாகச் செயல்படக்கூடியவர்.
ஆஸ்திரேலிய அணி ‘டி’ பிரிவில் உள்ளது. அதில் துருக்கி, அமெரிக்கா, பராகுவே ஆகிய அணிகளும் இடம்பெற்றுள்ளன.
ஆஸ்திரேலியா அதன் முதல் ஆட்டத்தில் துருக்கியை எதிர்கொள்கிறது. அது ஜூன் 13ஆம் தேதி வான்கூவர் நகரில் நடக்கிறது.
48 அணிகள் விளையாடும் உலகக் கிண்ண காற்பந்துப் போட்டி ஜூன் 12ஆம் தேதி தொடங்குகிறது. போட்டியை அமெரிக்கா, மெக்சிகோ, கனடா ஆகிய நாடுகள் ஏற்று நடத்துகின்றன.

