ஹைதராபாத்: கிரிக்கெட் வீரர் முகமது சிராஜ் தெலுங்கானா மாநில காவல்துறை துணை கண்காணிப்பாளராக (டிஎஸ்பி) நியமிக்கப்பட்டு உள்ளார்.
காவல்துறை தலைமை இயக்குநர் அலுவலகத்தில் அவர் அதிகாரபூர்வமாக அந்தப் பொறுப்பை ஏற்றார்.
முகமது சிராஜுக்கு மதிப்புமிக்க குரூப்-1 அரசுப் பதவி வழங்கப்படும் என்று தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி அறிவித்ததைத் தொடர்ந்து அந்தப் பதவி ஏற்பு நிகழ்ந்தது.
டி20 உலகக் கிண்ணப் போட்டியில் வென்ற இந்திய அணியில் இடம்பெற்றிருந்ததால் முகமது சிராஜுக்கு அரசு வேலை வழங்கப்படும் என்று முதல்வர் ரேவந்த் ரெட்டி இதற்கு முன்னர் தெரிவித்திருந்தார்.
எதிர்காலத் திறமைகளை வளர்ப்பதற்காக, விளையாட்டு வீரர்களை ஆதரிப்பதை நோக்கமாகக் கொண்டு, சிராஜுக்கு சாலை எண் 78, ஜூப்ளி ஹில்ஸில் 12 சென்ட் நிலத்தையும் தெலுங்கானா மாநில அரசு ஒதுக்கியுள்ளது.
தெலுங்கானா மாநிலம், ஹைதராபாத்தில் 1994ஆம் ஆண்டு பிறந்த முகமது சிராஜ், வலது கை வேகப்பந்து வீச்சாளர்.
அவரது தந்தை ஆட்டோ ரிக்ஷா ஓட்டுநர். சிராஜ் 19 வயதில் கிரிக்கெட் விளையாடத் தொடங்கினார்.
இந்தியன் பிரிமியர் லீக்கில் (ஐபிஎல்) ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக விளையாடி வருகிறார். இந்தியாவின் ஆசியக் கிண்ண வெற்றிக்கு முக்கியப் பங்காற்றிய அவர், இறுதிப் போட்டியில் ஆறு விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டநாயகன் ஆனார்.
தொடர்புடைய செய்திகள்
மேலும், இந்த ஆண்டு நடந்த டி20 உலகக் கிண்ண இறுதி ஆட்டத்தின்போது மிகவும் கவனிக்கப்பட்டவர் முகமது சிராஜ்.