முன்னர் எஸ் லீக் என அழைக்கப்பட்ட சிங்கப்பூர் பிரிமியர் லீக்கில் ஆக இளம் வயதில் ஒரு குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டவர் என்ற பெருமையைப் பெற்றவர் தல்விந்தர் சிங்.
கடந்த 2011ஆம் ஆண்டில் தஞ்சோங் பகார் குழுவின் தலைவர் பொறுப்பை ஏற்றபோது இவருக்கு வயது 18.
இந்நிலையில், 12 ஆண்டுகளுக்குப் பிறகு இன்னொரு பெருமையையும் தல்விந்தர் தேடிக்கொண்டுள்ளார்.
கம்போடியக் காற்பந்துக் குழு ஒன்றுடன் இணைந்துள்ள முதல் சிங்கப்பூரர் என்பதே அது. அந்நாட்டின் அங்கோர் டைகர் காற்பந்துக் குழுவிற்காக ஓராண்டு ஒப்பந்தத்தில் தல்விந்தர் கையெழுத்திட்டுள்ளார்.
“அந்தப் போட்டித்தன்மைமிக்க லீக்கில் எனது திறன்களை வெளிப்படுத்த முடியும் என்பதை நினைக்கும்போது மகிழ்ச்சியாக உள்ளது. கம்போடிய லீக்கில் விளையாடப்போகும் முதல் சிங்கப்பூரர் என்பது கௌரவம் அளிக்கிறது.
“சிங்கப்பூர் பிரிமியர் லீக்கிலும் தேசிய அணியிலும் விளையாடிய அனுபவத்தைக் கொண்டு, கம்போடியாவில் சிறப்பாக விளையாடவும் நாட்டிற்குப் பெருமை தேடித்தரவும் முயல்வேன்,” என்றார் இப்போது 30 வயதாகும் தல்விந்தர்.
அங்கோர் டைகர் குழு கடந்த 2015ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. சென்ற ஆண்டு லீக்கில் அக்குழு கடைசிக்கு முந்திய நிலையை, அதாவது ஏழாமிடத்தைப் பிடித்தது.
அங்கோர் டைகர் குழுவின் பயிற்றுநர் அலிஸ்டேர் ஹீத் கூறுகையில், “கடந்த சில காலமாகவே தல்விந்தர் சிங்கின் ஆட்டத்தைக் கவனித்து வந்துள்ளோம். பல்வேறு நிலைகளில் ஆடும் திறன் படைத்தவர் அவர். அவரது தலைமைத்துவம், வேகம், தற்காப்பு நுணுக்கத்தால் நாங்கள் பயனடைவோம் என்று உறுதியாக நம்புகிறேன்,” என்றார்.