ஹாங்ஜோ: ஆசிய விளையாட்டுகளின் துப்பாக்கிச்சுடும் போட்டி ஒன்றில் வடகொரிய, தென்கொரிய இரு தரப்பு வீரர்களும் பதக்கம் வென்றனர். பதக்கங்களைப் பெற மேடைக்குச் சென்றபோது வடகொரிய வீரர்கள், தென்கொரிய வீரர்களுடன் சேர்ந்து படமெடுத்துக்கொள்ள மறுத்துள்ளனர்.
ஆண்கள் 10 மீட்டர் நகரும் குறி (10 மீட்டர் ரன்னிங் டார்கெட்) குழுப் பிரிவில் வடகொரிய வீரர்கள் வெள்ளிப் பதக்கம் வென்ற பிறகு இது நடந்தது. தங்கம் வென்றது தென்கொரியா.
பொதுவாக விளையாட்டுகளில் வெற்றி நாட்டின் தேசிய கீதம் ஒலிக்கும்போது பதக்கம் வென்ற அனைவரும் அந்நாட்டுக் கொடியைப் பார்த்தபடி நின்று மரியாதை செலுத்துவது வழக்கம். வடகொரிய வீரர்கள் தென்கொரிய கொடியைப் பார்த்தபடி நிற்க மறுத்தனர்.
பின்னர் பதக்கம் வென்றவர்கள் அனைவரும் படமெடுப்பதும் வழக்கம். வெண்கலம் வென்ற இந்தோனீசிய வீரர்கள், தென்கொரிய வீரர்களுடன் படமெடுத்துக்கொண்டனர். ஆனால் வடகொரிய வீரர்கள் மறுத்தனர்.
தென்கொரிய வீரர் ஒருவர், வடகொரிய வீரரின் தோளில் தட்டிப் பேசவும் முயன்றார். அதற்கும் அந்த வடகொரிய வீரர் கண்டுகொள்ளவில்லை. அவர் பேசாமல் இருந்ததோடு தென்கொரிய வீரரைத் திரும்பிக்கூட பார்க்கவில்லை.
ஹாங்ஜோ நகரின் புறநகர்ப் பகுதியில் இருக்கும் ஃபுயாங் யின்ஹு விளையாட்டு நிலையத்தில் இச்சம்பவம் நடைபெற்றது.