மார்பகப் புற்றுநோயிலிருந்து குணமடைந்த சாந்தே காத்தூன் எனும் 66 வயது மாது ஐந்து கிலோமீட்டர் பெருநடையை வெற்றிகரமாக முடித்துள்ளார்.
இவ்வாண்டுத் தொடக்கத்தில் ஆடைகளை அணிந்துகொள்வது, தோடுகளைப் போட்டுக்கொள்வது போன்ற எளிமையான செயல்களிலும் இவரால் ஈடுபட முடியாமல் போனது. புற்றுநோய்க்கான கீமோதெரப்பி சிகிச்சையை மேற்கொண்டதால் இவரின் விரல்கள் மறத்துப்போனதே அதற்குக் காரணம்.
நிதிச் சேவை ஆலோசகரான காத்தூனின் கீழ் முதுகில் வலி இருந்ததால் சில நேரங்களில் அவரால் ஐந்து நிமிடங்களுக்குக்கூட நடக்க முடியாதிருந்தது.
இன்றோ கிரேட் ஈஸ்டர்ன் பெண்கள் ஓட்டத்தின் ஐந்து கிலோமீட்டர் பெருநடையை முழுமையாக முடித்திருக்கிறார். 2017ஆம் ஆண்டு புற்றுநோய் இருப்பது தெரிய வந்ததும் இவர் நம்பிக்கையை இழக்காமல் இயங்கி பிறருக்கு ஊக்கம் தரும் ஒருவராக விளங்குகிறார்.

