லண்டன்: சென்ற ஆண்டுக்கான உலகின் ஆகச் சிறந்த ஆண் காற்பந்து வீரர் விருதைத் தட்டிச் சென்றுள்ளார் அர்ஜென்டினா நட்சத்திரம் லயனல் மெஸ்ஸி.
அனைத்துலகக் காற்பந்துச் சம்மேளனம் வழங்கும் இவ்விருதை 36 வயது மெஸ்ஸி மூன்றாவது முறையாக வென்றிருக்கிறார்.
2022ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் அர்ஜென்டினா உலகக் கிண்ணத்தை வெல்ல உறுதுணையாக இருந்தார் மெஸ்ஸி. அதற்கும் சென்ற ஆண்டு ஆகஸ்ட் மாதத்துக்கும் இடைப்பட்ட காலத்தில் காற்பந்து வீரர்களின் விளையாட்டைக் கொண்டு விருதுகள் வழங்கப்பட்டன.
அந்த வகையில், உலகக் கிண்ணப் போட்டி நிறைவடைந்த பிறகு பிரான்சின் பிஎஸ்ஜி குழுவுக்கு சிறப்பாக விளையாட சிரமப்பட்ட மெஸ்ஸி விருதை வென்றது ஆச்சரியத்தை ஏற்படுத்தியதாகத் தெரிவிக்கப்பட்டது. இங்கிலிஷ் பிரிமியர் லீக் குழுவான மான்செஸ்டர் சிட்டியின் எர்லிங் ஹாலண்ட் விருதை வெல்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆகச் சிறந்த பயிற்றுவிப்பாளர் விருதை வென்றார் சிட்டி நிர்வாகி பெப் கார்டியோலா. சென்ற பருவத்தில் அதன் வரலாற்றில் முதன்முறையாக சிட்டி யூயேஃபா சாம்பியன்ஸ் லீக் கிண்ணத்தை வென்றதைத் தொடர்ந்து கார்டியோலா வாகை சூடினார்.
ஆகச் சிறந்த கோல் காப்பாளர் விருதை சிட்டியின் எடர்சன் வென்றார்.
பெண்கள் காற்பந்தில் ஆகச் சிறந்த பயிற்றுவிப்பாளராக இங்கிலாந்தின் சரினா வீக்மன் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆகச் சிறந்த வீராங்கனை விருதை வென்றார் ஸ்பெயினின் ஐட்டனா பொன்மாட்டி.