பியூனஸ் அயர்ஸ்: 2024 பாரிஸ் ஒலிம்பிக் காற்பந்துப் போட்டிகளில் அர்ஜென்டினா அணிக்கு விளையாட அதன் காற்பந்து நட்சத்திரமான லயனல் மெஸ்ஸிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என்று அதன் 23 வயதுக்குட்பட்ட குழுவின் நிர்வாகி ஜேவியர் மஸ்செரானோ தெரிவித்துள்ளார்.
பிப்ரவரி 11ஆம் தேதி பிரேசிலை 1-0 என்ற கோல் கணக்கில் வென்று பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளில் விளையாட அர்ஜென்டினா தகுதி பெற்றது.
36 வயதாகும் மெஸ்ஸி, பாரிசில் அர்ஜென்டினா குழு சார்பாக விளையாடும் சாத்தியம் பற்றி அர்ஜென்டினா மற்றும் பார்சிலோனா குழுக்களில் அவருடன் விளையாட மஸ்செரானோவிடம் கேட்கப்பட்டது.
அதற்குப் பதிலளித்த அவர், “மெஸ்ஸியிடம் நான் கொண்டிருக்கும் நட்பு பற்றி அனைவருக்கும் நன்குத் தெரியும். மெஸ்ஸி போன்ற சிறந்த ஆட்டக்காரர் எங்கள் குழுவில் இடம்பெற்றால், இளம் ஆட்டக்காரர்களுக்கு அது பெரிய உற்சாகத்தை அளிக்கும் என்பதில் ஐயமில்லை. இந்த அழைப்பை ஏற்றுக்கொள்வது அவரது முடிவை பொறுத்தது,” என்றார்.
தற்போது இன்டர் மயாமி குழுவுக்கு விளையாடும் மெஸ்ஸி, 2022ல் கத்தாரில் நடைபெற்ற உலகக் கிண்ணப் போட்டிகளில் மிகச் சிறப்பாக அர்ஜென்டினாவை வழிநடத்தி அந்நாடு உலகக் கிண்ணத்தை வென்றதில் முக்கிய பங்காற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒலிம்பிக் ஆண்கள் காற்பந்துப் போட்டிகள் இவ்வாண்டு ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் நடைபெறும். ஒவ்வொரு குழுவும் 23 வயதுக்கு மேற்பட்ட மூன்று ஆட்டக்காரர்களைத் தங்கள் அணியில் விளையாட பதிவு செய்யலாம்.