பெய்ஜிங்: சீனாவைச் சேர்ந்த 23 நீச்சல் வீரர்கள் தடை செய்யப்பட்ட ஊக்க மருந்தை உட்கொண்டது ஜப்பான் தலைநகர் தோக்கியோவில் நடைபெற்ற ஒலிம்பிக் விளையாட்டுகள் தொடங்குவதற்கு சில மாதங்களுக்கு முன்னர் தெரியவந்தது.
எனினும், அவர்களுக்குத் தடை உத்தரவுகள் பிறப்பிக்கப்படவில்லை. அதுகுறித்து சுயேச்சையாக இயங்கும் குழு ஒன்று நடத்தும் விசாரணையில் தாங்கள் ஒத்துழைக்கப்போவதாக சீனா வெள்ளிக்கிழமையன்று (ஏப்ரல் 26) தெரிவித்தது.
அந்த விவகாரத்தை உலக ஊக்க மருந்துத் தடுப்பு அமைப்பு (வாடா) கையாண்ட விதம் பெரும் கண்டனத்துக்கு உள்ளாகி வருகிறது. அதனைத் தொடர்ந்து சுவிட்சர்லாந்து வழக்கறிஞர் எரிக் கொட்டியரின் தலைமையில் சுயேச்சையாக இயங்கும் குழு ஒன்று விசாரணை நடத்தும் என்று வாடா வியாழக்கிழமையன்று (ஏப்ரல் 26) கூறியது.
சீனாவின் ஊக்க மருந்துத் தடுப்புத் திட்டத்தை ஆராயக் குழு ஒன்றை அந்நாட்டுக்கு அனுப்பப்போவதாகவும் வாடா தெரிவித்தது.
“சீனாவின் ஊக்க மருந்துத் தடுப்பு அமைப்பு (சினாடா), வாடாவின் விசாரணையில் தொடர்ந்து பங்கேற்கும், தேவைப்படும்போது ஒத்துழைக்கும்,” என்று சினாடா அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டது.