சென்னை: ‘லோக் அதாலத்’ எனப்படும் மக்கள் நீதிமன்றங்கள் மூலம், ஒரே நாளில் தமிழகம் முழுவதும் ஏறக்குறைய ஒரு லட்சம் வழக்குகளுக்குத் தீர்வு காணப்பட்டுள்ளது.
பல்வேறு வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.1,034.93 கோடி இழப்பீடு கிடைத்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய நீதிமன்றங்களில் லட்சக்கணக்கான வழக்குகள் நீண்ட காலமாக நிலுவையில் உள்ளன. இவற்றை விரைவாக விசாரித்து முடிக்க நாடு தழுவிய அளவில் ஆண்டுதோறும் நான்கு முறை ‘லோக் அதாலத்’ என்ற ‘மக்கள் நீதிமன்றம்’ கூடுவது வழக்கம்.
அந்த வகையில், நாடு முழுவதும் லோக் அதாலத் நீதிமன்றங்கள் சனிக்கிழமை (மார்ச் 14) மீண்டும் கூடின. தமிழகத்தில் மாநில சட்டப் பணிகள் ஆணைக் குழு இந்த ‘தேசியலோக் அதாலத்’ விசாரணைக்கு ஏற்பாடு செய்ததாக அக்குழுவின் உறுப்பினர் செயலாளர் எஸ்.பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.
மொத்தம் 516 அமர்வுகள் அமைக்கப்பட்டன. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள மோட்டார் வாகன விபத்து வழக்குகள், காசோலை மோசடி வழக்குகள், ஊழியர்கள் தொடர்பான வழக்குகள், ஜீவனாம்ச வழக்குகள் என்று பல்வேறு வகையான வழக்குகளை இந்த அமர்வுகள் விசாரித்தன.
“வழக்குகளில் தொடர்புள்ள இருதரப்பினரிடமும் பேசி, அவர்களின் முழு சம்மதத்துடன் 103,366 வழக்குகளுக்குத் தீர்வு காணப்பட்டன. இதன்மூலம், பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.1,034.93 கோடி இழப்பீடு கிடைத்துள்ளது,” என்றார் திரு பாலகிருஷ்ணன்.

