தென்காசி: தமிழக வெற்றிக் கழகத்துக்கு ஒவ்வொரு தொகுதியில் இருந்தும் இரண்டு லட்சம் வாக்குகள் கிடைக்கும் என்பதால், விஜய் தமிழக முதல்வராவது உறுதி என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கூறியுள்ளார்.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் ஆனந்த் பேசினார்.
“படிப்படியாக முன்னேறி வரும் தவெகவின் பக்கம் சாதாரண மக்களும் ஊழியர்களும் உள்ளனர். நமது மூச்சு, முகவரி எல்லாமே விஜய்தான்.
“கட்சி நிகழ்வுகளில் பதாகைகளை வைக்கவேண்டாம் என விஜய் கூறியுள்ளார். அதன்படி அனைவரும் செயல்பட வேண்டும்.
“ஒவ்வோர் வீட்டிலும் குறைந்தது இருவர் அல்லது மூவர் தவெக பக்கம் உள்ளதால் ஒரு தொகுதியில் குறைந்தது 80,000 வீடுகள் இருந்தது எனில், தவெகவுக்கு சராசரியாக 2 லட்சம் வாக்குகள் கிட்டும்.
“தமிழக மக்களுக்கு அமைதியான வாழ்க்கையை தவெகவால் மட்டுமே கொடுக்க முடியும். 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் தவெக வெற்றிபெற்று, முதல்வர் பதவியில் விஜய் அமர்வார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. தவெகவின் ஆட்சி அமைந்ததும் சங்கரன்கோவிலில் ஜவுளிப் பூங்கா தொடங்கப்படும்,” என்று ஆனந்த் கூறினார்.