மதுரை: தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அகழாய்வுப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் பல்வேறு அரிய தொல்பொருள்கள் கிடைத்து வருகின்றன.
இந்நிலையில், மதுரை அருகே 2,000 ஆண்டுகள் பழைமைவாய்ந்த தாழிப்பானை கண்டெடுக்கப்பட்டுள்ளதாகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
சங்க காலத்திற்கு (கிபி 2000) முன்பு தமிழகத்தில் இறந்தவர்களின் சடலங்களை மண் பானையில் வைத்துப் புதைக்கும் வழக்கம் இருந்துள்ளது.
மண் பானையில் முழு உடலையும் புதைக்க முடியாவிட்டால் இறந்தவர்களின் எலும்புகளைச் சேகரித்து அவற்றை மட்டும் பானையில் வைத்துப் புதைப்பதுண்டு. இல்லையெனில் இறந்தவர்கள் பயன்படுத்திய பொருள்கள் மட்டும் பானைக்குள் வைக்கப்படும்.
கறுப்பு, சிவப்பு நிறத்திலான இந்த மண் பானைகள்தான் தற்போது கிடைத்துள்ளன. மதுரை மாவட்டம், பாப்பிநாயக்கன்பட்டி சங்கரலிங்கபுரம் பகுதியில் உள்ள சல்லுப்பன் கரடு அடிவாரத்தில் மூன்று தாழிப்பானைகளை ஆய்வாளர்கள் கண்டெடுத்துள்ளனர்.
மூன்று பானைகளும் சிதைந்த நிலையில் காணப்படுவதாகவும் அப்பகுதி முழுவதும் கறுப்பு, சிவப்பு நிறத்திலான பானை ஓடுகள் பரவலாகக் காணப்படுகின்றன என்றும் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
அந்தப்பகுதி ஒரு இடுகாடுபோல் காட்சி அளிப்பதாகவும் கூறியுள்ளனர்.

