சென்னை: சென்னை விமான நிலையத்தில் 3.5 கிலோகிராம் கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மும்பையில் இருந்து தங்கம் கடத்தி வரப்படுவதாக புலனாய்வுத் துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
இந்த தகவலின் அடிப்படையில் மும்பையில் இருந்து சென்னை விமான நிலையத்திற்கு வந்த பயணிகளைக் கண்காணித்த அதிகாரிகள், சந்தேகத்திற்கிடமாக வந்த ஆறு பேரிடம் சோதனை நடத்தினர்.
அப்போது அவர்கள் தங்களது உள்ளாடைகளில் 3.5 கிலோ தங்கத்தை பசை வடிவில் கடத்தி வந்தது தெரியவந்தது.
இதையடுத்துஆறு பேரையும் கைது செய்த அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
மேலும், பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் அனைத்துலக மதிப்பு ரூபாய் 2.8 கோடி இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.