புதுடெல்லி: தமிழகத்துக்குக் கூடுதலாக 350 எம்பிபிஎஸ் படிப்புகளுக்கான இடங்களை தேசிய மருத்துவ ஆணையம் ஒதுக்கீடு செய்துள்ளது. நடப்பு ஆண்டிலேயே இந்த ஒதுக்கீட்டை அமல்படுத்தவும் அது உத்தரவிட்டது.
நாடு முழுவதும் கூடுதல் மருத்துவ இடங்களைச் சேர்ப்பதற்கான அனுமதி தொடர்பில், தேசிய மருத்துவ ஆணையம் பட்டியல் ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதன் இணையத் தளத்தில் முழுமையாக வெளியிடப்பட்டுள்ள இந்தப் பட்டியலில் தமிழகத்தைச் சேர்ந்த ஏழு தனியார் மருத்துவமனைகளில், தலா 50 இடங்கள் என, 350 எம்பிபிஎஸ் இடங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன் மூலம், இந்தியா முழுவதும் எம்பிபிஎஸ் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை, 6,850ஆக அதிகரித்துள்ளது.
இதேபோல், ஒட்டுமொத்த மருத்துவப் படிப்புகளுக்கான எண்ணிக்கை 123,700ஆக உயர்ந்தது.
மருத்துவக் கல்லூரிக்கான அடிப்படை கட்டமைப்பு வசதிகளைச் சுட்டிக்காட்டி, 1,056 மருத்துவ இடங்கள் குறைக்கப்பட்டுள்ளன.
மேலும், 500 கூடுதல் இடங்களைத் தமிழகத்துக்கு அளிக்கக் கோரி அளிக்கப்பட்ட விண்ணப்பத்தையும் தேசிய மருத்துவ ஆணையம் ஏற்க மறுத்துவிட்டது.
நடப்பாண்டில், கூடுதல் இடங்கள் சேர்க்கப்படுவதாலும் வெளிநாட்டு வாழ் மாணவர்கள் தொடர்பான ஆவணங்களை ஆய்வு செய்ய வேண்டியிருப்பதாலும் மருத்துவப் படிப்புக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு, செப்டம்பர் 25ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.