சென்னை: தமிழ் மொழி வளர்ச்சிக்காகப் பாடுபட்ட 38 அறிஞர்களுக்கு 2023ஆம் ஆண்டுக்கான தமிழ்ச் செம்மல் விருதுகளை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வழங்கினார்.
2024ஆம் ஆண்டுக்கான விருதாளர்கள் தேர்வு செய்யப்பட உள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
தமிழ் மொழி மற்றும் அதன் பண்பாட்டு வளர்ச்சிக்காகப் பாடுபடும் அறிஞர்கள், ஆர்வலர்களின் தமிழ்ப் பணியை மெச்சும் வகையில், தமிழக தமிழ் வளர்ச்சித் துறை, கடந்த 2015ஆம் ஆண்டு முதல் மாவட்டத்துக்கு ஒருவர் வீதம் தமிழ்ச் செம்மல் விருது வழங்கி வருகிறது.
அதன்படி, 2023ஆம் ஆண்டுக்கான தமிழ்ச் செம்மல் விருதுக்குத் தேர்வு செய்யப்பட்ட 38 பேருக்கு விருது வழங்கும் விழா சென்னையில் சனிக்கிழமை நடைபெற்றது.
தமிழ் வளர்ச்சி, செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, 38 பேருக்கும் தலா ரூ.25,000 பரிசுத் தொகைக்கான காசோலையுடன் விருதுகளை வழங்கினார்.
விருதுகளை வழங்கி உரையாற்றிய அமைச்சர், தமிழ் வளர்ச்சித் துறையில் பல்வேறு முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அந்த வகையில், தமிழார்வலர்கள், அறிஞர்களின் தமிழ்ப் பணியைக் கௌரவிக்கும் விதமாகவும், அவர்களுக்கு ஊக்கம் அளிக்கும் விதமாகவும் அரசு இந்த விருதுகளை வழங்குகிறது.
இதன் தொடர்ச்சியாக, 2024ஆம் ஆண்டுக்கான தமிழ்ச் செம்மல் விருதுபெறத் தகுதியானவர்கள் விரைவில் தேர்வு செய்யப்பட உள்ளனர். முறையாக குழு அமைத்து, அதன் மூலமாக விருதாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
தொடர்புடைய செய்திகள்
மத்திய அரசால் பல்வேறு வடிவங்களில் தமிழகத்தில் இந்தி திணிக்கப்பட்டு வருகிறது. முதல்வர் ஸ்டாலின் உத்தரவுப்படி, இந்தித் திணிப்பை ஒருபோதும் ஏற்க மாட்டோம்.
இந்த நிகழ்ச்சியில் தமிழ் வளர்ச்சி, செய்தித் துறை செயலர் வே.ராஜாராமன், தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் ந.அருள் உள்ளிட்டோருடன் தமிழறிஞர்களும் ஆர்வலர்களும் கலந்துகொண்டனர்.

