சென்னை: சென்னை மாநகராட்சியில் லஞ்சம் வாங்கிய ஏழு அலுவலர்கள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் மூவர்மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கரூர் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் விஜய், “அரசு அலுவலகங்களில் லஞ்சம் கேட்டால் கொடுக்காதீர்கள். என் பெயரை சொல்லுங்கள்,” என கூறினார்.
இதையடுத்து லஞ்ச ஒழிப்புக் காவல்துறை தமிழகம் முழுவதும் அரசு அலுவலகங்களில் சோதனையைத் தீவிரப்படுத்தியிருக்கிறது.
சொத்து பத்திரப் பதிவு, சாலைப் போக்குவரத்து அலுவலகங்கள், மாநகராட்சி அலுவலகங்களில் சோதனை நடத்தின. அப்போது மின்னிலக்கப் பரிவர்த்தனை மூலம் லஞ்சம் கைமாறியதைக் கண்டறிந்ததோடு ரொக்கப் பணத்தையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
சென்னை மாநகராட்சியில் ராயபுரம், திரு.வி.க.நகர், அண்ணா நகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், பெருங்குடி ஆகிய ஆறு மண்டல அலுவலகங்களில் கடந்த 3ஆம் தேதி நடைபெற்ற சோதனையில் கணக்கில்வராத பணம் கைப்பற்றப்பட்டது. யுபிஐ பரிவர்த்தனை மூலம் லஞ்சம் கைமாறியதும் கண்டுபிடிக்கப்பட்டது.
மாநகராட்சி மண்டலங்களில் நடைபெற்ற சோதனை அடிப்படையில் ஏழு பேரை மாநகராட்சி ஆணையர் ஜி.எஸ்.சமீரன் இடைநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.
திரு.வி.க.நகர் மண்டலத்தில் செயற்பொறியாளர் ஆர்.சரவணன், உதவி செயற்பொறியாளர் டி.ரவிவரமன், உதவிப் பொறியாளர் டி.சரஸ்வதி, வருவாய் பிரிவு இளநிலை உதவியாளர், மணிகண்டன் ஆகிய நால்வரும் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.
தேனாம்பேட்டை மண்டலத்தில் கண்காணிப்பாளர் ஏ.ஸ்ரீராமுலு, சுகாதார ஆய்வாளர் ஏ.மஞ்சித் ஹுசைன், தூய்மைப் பணி மேற்பார்வையாளர் ஆர்.கோதண்டன் ஆகிய மூவரும் இடைநீக்கம் வழக்கும் பதிவு செய்யப்பட்டது.

