சென்னை: கடந்த ஐந்து மாதங்களில் மட்டும், தமிழகம் முழுவதும் 7,500 பேர் டெங்கி காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இதுவரை டெங்கி பாதிப்பால் நான்கு பேர் உயிரிழந்துவிட்டனர். ஏராளமானோர் பருவநிலை மாற்றம் காரணமாக, காய்ச்சல், சளி, இருமல் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மாநிலம் முழுவதும் நாள்தோறும் நூற்றுக்கும் அதிகமானோர் பாதிப்புக்கான அறிகுறிகளுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் இவர்களில் குறைந்தபட்சம் 30 விழுக்காட்டினருக்கு டெங்கி காய்ச்சல் பாதிப்பு இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சிலர் நோய் பாதிப்பு குறித்து விவரம் அறியாமல், விழிப்புணர்வு இன்றி பாதிப்புக்கான அறிகுறிகள் தீவிரமடைந்த பிறகே மருத்துவமனைக்கு வருவதாகவும் இதன் காரணமாகவே சிகிச்சை பலனின்றி நான்கு பேர் உயிரிழந்துவிட்டதாகவும் அதிகாரிகள் மேலும் கூறினர்.
பருவநிலை மாற்றத்தால் டெங்கி காய்ச்சல் பாதிப்பு கடந்த இரண்டு மாதங்களாக அதிகரித்துள்ளதாகவும் அவற்றைக் கட்டுப்படுத்த உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து செயல்பட்டு வருவதாகவும் சுகாதார அமைச்சு தெரிவித்தது.
டெங்கி காய்ச்சல் சிகிச்சைக்குப் பயன்படுத்தப்படும் மருந்துகள் போதிய அளவில் இருப்பு வைக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சு மேலும் கூறியுள்ளது.