அதிமுகவிலிருந்து விலகுவதாக நடிகை கௌதமி அறிவிப்பு

அதிமுகவிலிருந்து விலகுவதாக நடிகை கௌதமி அறிவிப்பு

1 mins read
03454ab5-1700-45c4-a7d2-61d847acb30a
நடிகை கௌதமி. - கோப்புப் படம்: நக்கீரன்

சென்னை: அதிமுக கொள்கைப் பரப்புத் துணைச் செயலாளர் பொறுப்பில் இருந்து விலகிவிட்டதாக நடிகை கவுதமி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எழுதியுள்ள கடிதத்தில், சமூகச் சேவையாற்றுவதற்கு ஏதுவாக கனத்த இதயத்துடன் அதிமுகவிலிருந்து விடுவித்துக்கொள்வதாகக் குறிப்பிட்டுள்ளார்.

சட்டமன்றத் தேர்தல் தோல்விக்குப் பின்னர் பல்வேறு முக்கிய பிரமுகர்களும் பிரபலங்களும் அதிமுகவில் இருந்து விலகி தவெக, திமுக உள்ளிட்ட கட்சிகளில் இணைந்து வருகின்றனர்.

அண்மையில் முன்னாள் அமைச்சர்கள் கடம்பூர் ராஜு, எம்.சி.சம்பத், முன்னாள் எம்எல்ஏக்கள் எனப் பலர் அடுத்தடுத்து தவெகவில் ஐக்கியமாயினர்.

ஆகக் கடைசியாக, சனிக்கிழமை (ஜூன் 13) முன்னாள் அமைச்சர் கே.டி.பச்சைமால், முன்னாள் நெல்லை மேயர் புவனேஸ்வரி, முன்னாள் எம்பிக்கள் வனரோஜா, பாலகங்கா உட்பட பல அதிமுக பிரமுகர்கள் அதிமுகவிலிருந்து விலகி தவெகவில் தங்களை இணைத்துக்கொண்டனர்.

மேலும், முன்னாள் எம்எல்ஏ விஜயதாரணியும் அவரது ஆதரவாளர்களும் பாஜகவிலிருந்து விலகி தவெகவில் இணைந்துள்ள நிலையில், அதிமுகவில் இருந்து விலகுவதாக நடிகை கௌதமி ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 14) அறிவித்தார்.

இதனால் அதிமுக தலைமை அதிர்ச்சி அடைந்துள்ள நிலையில், பழனிசாமியைக் கடுமையாக விமர்சித்து, முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

குறிப்புச் சொற்கள்