சென்னை: தமிழ்நாட்டில் 2026ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் அதிமுக - பாஜக இணைந்து போட்டியிடும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனால் புதுச்சேரி அதிமுகவுக்கு எவ்விதப் பயனும் விளையப் போவதில்லை என்று புதுச்சேரி அதிமுகவினர் கருதுவதாகத் தமிழக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
சென்ற 2024 மக்களவைத் தேர்தலில் புதுச்சேரியில் அதிமுக தனித்துப் போட்டியிட்டபோது, சட்டப்பேரவைத் தேர்தல் தோல்விக்கு பாஜக-வுடன் கூட்டணி அமைத்ததே காரணம் எனப் பிரசாரம் செய்தார்கள். அதனால், “2026 பேரவைத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு எங்களது பலத்தைக் காட்டுவோம்,” எனப் புதுச்சேரி அதிமுகவினர் மார்தட்டி நின்ற நிலையில், எதிர்பாராத திருப்பமாக அதிமுக - பாஜக கூட்டணி அமைந்துவிட்டது. இதைத் தங்களுக்கு ஏற்பட்ட பின்னடைவாகவே புதுச்சேரி அதிமுகவினர் கருதுகின்றனர்.
அதிமுகவிலிருந்து விலகிய முன்னாள் எம்எல்ஏ அசனா
பாஜக கூட்டணியை ஏற்காமல் அதிமுகவை விட்டு விலகிய முன்னாள் எம்எல்ஏ-வான அசனா, “பாஜக கூட்டணியால்தான் 2021 சட்டமன்றத் தேர்தலில் வெற்றிவாய்ப்பை இழந்தோம். தோல்விக்கு பாஜக கூட்டணிதான் காரணம் என்பதால் தான் பாஜக-வுடன் கூட்டணி இல்லை என முடிவெடுக்கப்பட்டது. அதை மறந்துவிட்டு மீண்டும் பாஜக-வுடன் கூட்டணி சேர்ந்ததை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை,” என்றார்.
2026ல் போட்டியிட திட்டமிட்டு தொகுதிக்குள் வேலை செய்து வந்த அதிமுக-வினர் பலரும் தற்போது, தங்களுக்கு போட்டியிடத் தொகுதி கிடைக்குமா, சிறுபான்மையினர் வாக்கு கிடைக்குமா என்றெல்லாம் கவலைப்பட ஆரம்பித்துவிட்டார்கள்.
ஏற்கெனவே கோஷ்டிப் பூசல்களால் கலகலத்துக் கிடக்கிறது புதுச்சேரி அதிமுக. இந்த நிலையில் மீண்டும் பாஜக கூட்டணிக்குள் வந்திருப்பதால் இம்முறையும் பேரவைக்குள் செல்லும் வாய்ப்பை இழந்துவிடுவோமோ என அதிமுக தொண்டர்கள் அச்சப்படுவதாக அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.
பாஜகவுடன் சேர்ந்தது வருத்தமே - அதிமுக முன்னாள் எம்எல்ஏ குணசேகரன்
இந்நிலையில், அதிமுக - பாஜக கூட்டணி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், திருப்பூர் மாநகர் மாவட்ட அதிமுக ஆலோசனைக் கூட்டம் பொள்ளாச்சி ஜெயராமன் தலைமையில் திருப்பூரில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. குணசேகரன் பேசுகையில், பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைத்தது வருத்தமாக இருந்தாலும் இயக்கத்தைக் காப்பாற்ற வேண்டிய கடமை நமக்கு உள்ளது. இஸ்லாமியர்கள் வருத்தம் அடைய வேண்டாம், அதிமுக என்றும் உங்களுடன் துணை நிற்கும் என்றார்.
நிர்பந்தம் காரணமாகக் கூட்டணி
இதே நிகழ்வில் முன்னாள் கவுன்சிலர் கண்ணப்பன் பேசுகையில், நாதழுதழுக்க குரல் உடைந்து, கட்சியை உடைக்கப் பார்க்கின்றனர், நிர்பந்தம் காரணமாகக் கூட்டணி வைக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.

