மதுரை: மதுரை மாவட்டம் சிலைமான் அருகே வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 6) அதிமுக பிரமுகரான 36 வயது செந்தில்குமார் வெட்டிக் கொல்லப்பட்டார்.
சாமநத்தம் கிராமத்தைச் சேர்ந்த இவர், அதே பகுதியில் தேநீர்க் கடை நடத்தி வந்தார்.
வெள்ளிக்கிழமை காலை 6 மணிக்கு கடையைத் திறக்கச் சென்றபோது, நான்கு பேர் கொண்ட கும்பல் அவரை வழிமறித்துத் தாக்கியது. பின்னர், அரிவாளால் சரமாரியாக வெட்டிக் கொன்றுவிட்டு அவர்கள் தப்பிச் சென்றனர்.
காவல்துறையின் முதல்கட்ட விசாரணையில், அதே பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர், இரவு நேரம் செந்தில் குமாரின் டீ கடையில் மது அருந்தியதாகவும் அதனை செந்தில் குமார் கண்டித்ததால் இந்தக் கொலைச் சம்பவம் நடைபெற்றதாகவும் தெரியவந்துள்ளது.
கொலையாளிகள் தேடப்பட்டு வருகின்றனர்.
செந்தில்குமாருக்கு இரு குழந்தைகள் உள்ளனர். இவர் சாமநத்தம் ஊராட்சித் துணைத் தலைவராக இருந்தார். திருப்பரங்குன்றம் அதிமுக ஒன்றியச் செயலாளர் நிலையூர் முருகனிடம் பணியாற்றி வந்தார்.

