செங்கல்பட்டு: கூட்டணிக்காக கடந்த மூன்று ஆண்டுகளாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியுடன் அதிமுக பேச்சுவார்த்தை நடத்தி வந்ததாக தொல் திருமாவளவன் கூறியுள்ளார்.
அதிமுகவுடன் விசிக கூட்டணி அமைத்திருந்தால் தமிழக அரசியல், தேர்தல் களத்தில் பெரும் மாற்றம் ஏற்பட்டிருக்கும் என்று செங்கல்பட்டில் மேற்கொண்ட தேர்தல் பிரசாரத்தின்போது அவர் குறிப்பிட்டார்.
விசிக நினைத்திருந்தால் பல்வேறு கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி கூட்டணி அமைத்திருக்க முடியும் என்றும் ஆனால், கொள்கைதான் முக்கியம் என்று கூறி, திமுகவுடன் கூட்டணி அமைத்துள்ளது என்றும் திருமாவளவன் கூறினார்.
திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளுடனும் ஒரே சமயத்தில் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தால் அதிக தொகுதிகள் கிடைத்திருக்கக் கூடும் என்று குறிப்பிட்ட அவர், அவ்வாறு கிடைத்த அனைத்து வாய்ப்புகளையும் விசிக தவிர்த்திருப்பதாகத் தெரிவித்தார்.
“மூன்று ஆண்டுகளாக அதிமுகவுடன் கூட்டணி அமைக்க பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டுள்ளன. அப்படி கூட்டணி வைத்திருந்தால், பாஜகவுடன் எடப்பாடி பழனிசாமி கூட்டணி வைத்திருக்க மாட்டார். இன்று அரசியல், தேர்தல் களமே மாறியிருக்கும்,” என்றார் திருமாவளவன்.

