சிங்கப்பூரிலிருந்து சென்னைக்கு 180 பயணிகளுடன் புறப்பட்ட ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம், புதன்கிழமை (மே 28) தரையிறங்குவதற்கு சிறிது நேரமே இருந்த நிலையில் காற்றின் திசை வேகம் இடையூறாக அமைய விமானத்தைத் தரையிறக்காமல் ரத்து செய்து பெரும் விபத்தைத் தவிர்த்துள்ளார் விமானி.
இதனால் 180 பயணிகளும் உயிர் தப்பினர். திட்டமிட்டப்படி உள்ளூர் நேரப்படி காலை 10.15 மணியளவில் சென்னை விமான நிலையத்தில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் தரையிறங்கியிருக்க வேண்டும்.
ஆனால், கடும் காற்று வீசியதன் காரணமாக விமானம் பாதுகாப்பாகத் தரையிறங்குவதற்குச் சாதகமான சூழல் அமையவில்லை.
இத்தகைய சூழலில் நிலைமையை உடனடியாகக் கணித்த விமானி, அப்போது குறுக்கே வீசிய காற்றின் வேகத்தில் விமானத்தைத் தரையிறக்கினால், விமானம் ஓடுபாதையிலிருந்து விலகுவது உள்ளிட்ட இதர அசம்பாவிதம் நேர்ந்து விமானம் விபத்துக்குள்ளாகக்கூடும் என்பதை உணர்ந்து, விமானத்தைத் தரையிறக்கவில்லை.
மாறாக, விமானத்தை மீண்டும் சென்னையில் வட்டமடிக்கச் செய்து ஏறத்தாழ அரை மணி நேரத்திற்குப் பிறகு பாதுகாப்பாகத் தரையிறக்கினார்.
இதனால் விமானத்தில் இருந்த அனைவரும் காப்பாற்றப்பட்டனர். இந்தச் சம்பவத்தால் சென்னை விமான நிலையத்தில் சற்று நேரம் பதற்றம் நிலவியது.