சென்னை: காவிரி ஆற்றின் குறுக்கே கர்நாடக அரசு மேகதாது அணையைக் கட்டுவதற்கு மத்திய அரசு எவ்வித அனுமதியும் அளிக்கக்கூடாது என்று வலியுறுத்தும் தனித்தீர்மானம் தமிழ் நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. அந்தத் தீர்மானத்திற்கு அனைத்துக் கட்சியினரும் ஆதரவு தரவேண்டும் என்று முதல்வர் விஜய் கேட்டுக் கொண்டார். அதன்படி, அனைத்துக் கட்சியினரும் அந்தத் தனித் தீர்மானத்திற்கு ஆதரவளிப்பதாகத் தெரிவித்துள்ளனர்.
மேகதாது அணை தொடர்பாக சட்டப்பேரவையில் முதல்வர் விஜய், வெள்ளிக்கிழமை தனித் தீர்மானம் கொண்டு வந்தார். அதில், “காவிரி நடுவர் மன்றம் கடந்த 2007 பிப்ரவரி 5ஆம் தேதி அளித்த இறுதித் தீர்ப்பு, உச்ச நீதிமன்றம் கடந்த 2018 பிப்ரவரி16ஆம் தேதி அளித்த தீர்ப்பு ஆகியவற்றை மதிக்காமல், தொடர்புடைய படுகை மாநிலங்களின் ஒப்புதலையும், மத்திய அரசின் எந்தவித அனுமதியையும் பெறாமல் தன்னிச்சையாக மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசு முயற்சி செய்வதை ஏற்கமுடியாது. கர்நாடக அரசின் இந்தச் செயலுக்கு கடும் எதிர்ப்பை தெரிவிக்கிறோம்,” என்று கூறப்பட்டுள்ளது.
தீர்மானத்தை முன்மொழிந்து உரையாற்றிய முதல்வர் விஜய், அரசியல் கட்சிகளுக்குள் கொள்கை, நிலைப்பாடுகளில் கருத்துவேறுபாடுகள் இருக்கலாம். ஆனால், மக்களுக்கான பிரச்சினை என்றால், எல்லாக் கட்சிகளுமே மக்கள் பக்கம்தான் நிற்கும். நமது விவசாயிகள், மக்களுக்காக நிற்கவேண்டியது நமது கடமை. நதிநீர் உரிமையைப் பாதுகாக்கவேண்டிய பொறுப்பும் நம் அனைவருக்கும் உள்ளது.
அந்த உணர்வு அடிப்படையில், கட்சி வேறுபாடுகளை ஒதுக்கி வைத்துவிட்டு, ஒருவருக்கொருவர் குறை சொல்லாமல் ஒட்டுமொத்த தமிழகத்துக்காக நாம் அனைவரும் ஓரணியில் நிற்பவர்கள் என்பதை நிரூபிக்கவேண்டும். நமது விவசாயிகள், தமிழக மக்களுக்காகக் கொண்டு வரப்படும் இந்தத் தீர்மானத்தை ஒருமித்த கருத்துடன் அனைவரும் நிறைவேற்றித் தரவேண்டும் என்று முதல்வர் விஜய் பேசினார்.
இதைத்தொடர்ந்து, தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பேசிய திமுக, அதிமுக, காங்கிரஸ், விசிக, பாமக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், தேமுதிக, கொமதேக, மதிமுக, மமக, மஜக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் உறுப்பினர்களும் தங்கள் ஆதரவைத் தெரிவித்தனர்.

