திருச்சி: தமிழ் நாட்டில் ‘அம்மா மருந்தகங்கள்’ மூடப்படாது என்று கூட்டுறவு, உணவுத் துறைச் செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
திருச்சியில் கூட்டுறவுக் கடைகள் மற்றும் புதிதாக அமைக்கப்படும் முதல்வர் மருந்தகத்தில் சனிக்கிழமை (பிப்ரவரி 8) ஆய்வு மேற்கொண்ட போது ராதாகிருஷ்ணன் இதை தெரிவித்தார்.
“முதல்வர் மருந்தகம் இம்மாத இறுதிக்குள் தொடங்கப்படும். அதில் 186 மருந்துகள் விற்கப்படும். அவற்றில் 90 விழுக்காடு பொது மருந்துகளாகும். மேலும் மருந்தகத்தில் சித்தா, ஹோமியோபதி மருந்துகளும் கிடைக்கும்,” என்று அவர் கூறினார்.
முதல்வர் மருந்தகங்கள் திறக்கப்படுவதால், அம்மா மருந்தகங்கள் ஒரு போதும் மூடப்படாது. அவை தொடர்ந்து செயல்படும் என்று ராதாகிருஷ்ணன் உறுதியளித்தார்.
“மொத்தம் 1,000 மருந்தகங்கள் திறக்கப்பட உள்ளன. அதில் 300 தனிநபர்கள் உரிமம் பெற்றுள்ளனர். அதேபோல, 440 சங்கங்கள் உரிமம் பெற்றுள்ளன. இன்னும் 402 பேர் உரிமம் பெற உள்ளனர். 898 கடைகள் தயார் நிலையில் உள்ளன,” என்று ராதாகிருஷ்ணன் விளக்கினார்.
முதல்வர் மருந்தகங்களில் பொது மருந்துகள் 10 விழுக்காடு விலை குறைவாக கிடைக்கும். இவற்றின் மூலம் மக்களின் மருத்துவச் செலவு மாதம் ரூ.1,500 முதல் ரூ.2,000 வரை குறைய வாய்ப்புள்ளதாக அவர் குறிப்பிட்டார்.