சமூக வலைதளங்களில் ‘ரீல்ஸ்’ (Reels) காணொளிகள் மூலம் தமிழகத்திற்கு முதலீடுகளை ஈர்க்கும் தொழில்துறை அமைச்சர் கீர்த்தனாவின் புதிய முயற்சியை, ஆந்திர மாநில அமைச்சர் நாரா லோகேஷ் வரவேற்றுப் பாராட்டியுள்ளார்.
முதலீட்டாளர்களை ஈர்க்க அமைச்சர் கீர்த்தனா மேற்கொண்டுள்ள இந்த முன்னெடுப்பு பாராட்டுக்குரியது என இது தொடர்பில் திரு லோகேஷ் ‘எக்ஸ்’ தளத்தில் பதிவிட்டார்.
மாநிலத்தைச் சந்தைப்படுத்துவதும், முதலீட்டாளர்களிடம் நம்பிக்கையை ஏற்படுத்துவதும் ஒரு தொழில்துறை அமைச்சரின் முக்கியப் பணிகளாகும் என்று அவர் அந்தப் பதிவில் குறிப்பிட்டார்.
விமர்சனங்களைப் புறக்கணியுங்கள்; ட்ரோல்களால் (Trolls) வேலைவாய்ப்புகள் உருவாகாது, முதலீடுகளால் மட்டுமே அது சாத்தியம் என்றும் அவர் கூறினார்.
“பிரதமர் நரேந்திர மோடியின் கூற்றுப்படி, மாநிலங்கள் முன்முயற்சியுடன் செயல்பட்டு நாட்டின் வளர்ச்சியைத் துரிதப்படுத்த வேண்டும். தொழில் துறையில் தமிழகத்திற்கு ஆந்திரா ஒரு வலுவான போட்டியாளராக இருக்கும்,” என்று திரு லோகேஷ் குறிப்பிட்டார்.
முன்னதாக, தமிழகத் தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா வெளியிட்ட ‘ரீல்ஸ்’ காணொளியில் முதலீடுகள் மீதான தமிழக அரசின் ஆர்வத்தை விவரித்திருந்தார்.
“தமிழக அரசு எதிர்காலத்திற்காகக் காத்திருக்காமல் அதனை உருவாக்கி வருகிறது. கோப்புகளின் ஒப்புதலுக்காக நிறுவனங்களை நீண்ட காலம் காத்திருக்க வைக்கும் நிலையை மாற்றுவதற்காகவே முதல்வர் விஜய் என்னைப் பணியமர்த்தியுள்ளார்,” என்றார் அமைச்சர் கீர்த்தனா.
முதலீடுகளுக்கு 21 நாள்களுக்குள் விரைவான ஒற்றைச் சாளர ஒப்புதல்கள் (Single-window clearance) வழங்கப்படும் என அரசு உறுதியளிப்பதாகவும் அந்தக் காணொளி குறிப்பிடுகிறது.

