சென்னை: தமிழகம் முழுவதும் உள்ள மாநகராட்சி, நகராட்சி, வட்டார வளர்ச்சி அலுவலகங்களில் மேற்கொள்ளப்பட்ட அதிரடிச் சோதனை நடவடிக்கை காரணமாக பரபரப்பு நிலவியது.
மொத்தம் 41 இடங்களில் நடத்தப்பட்ட சோதனையின்போது கணக்கில் வராத ரூ.58 லட்சம் ரொக்கமாகப் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், இணையவழியில் மேற்கொள்ளப்பட்ட பணப்பரிவர்த்தனை தொடர்பான முக்கிய ஆவணங்களும் சிக்கியதாக ஊடகத் தகவல்கள் தெரிவித்தன.
மாநகராட்சி, நகராட்சி அலுவலகங்களில் பொதுமக்களுக்குப் பல்வேறு சேவைகள் வழங்கப்படுகின்றன. இவற்றுக்கு நிர்ணயிக்கப்பட்ட கட்டணங்கள் மட்டுமே வசூலிக்கப்பட வேண்டுமென்று விதிமுறை உள்ளது.
எனினும், பல இடங்களில் கூடுதல் தொகை கேட்கப்படுவதாகவும் லஞ்சம் தலைவிரித்தாடுவதாகவும் பல்வேறு தரப்பினர் தொடர்ந்து புகார்கள் எழுப்பி வந்தனர்.
மேலும், லஞ்சம் தராதவர்களின் மனுக்கள் மீதான நடவடிக்கை வேண்டுமென்றே தாமதம் செய்யப்படுவதாகவும் சில நேரங்களில் காரணமின்றி நிராகரிக்கப்படுவதாகவும் பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.
இதையடுத்து, மாநிலம் முழுவதும் ஒருங்கிணைந்து சோதனை நடத்த தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநர் அருண் உத்தரவிட்டதையடுத்து, 50க்கும் மேற்பட்ட தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
வெள்ளிக்கிழமை மாலை ஒரே நேரத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தினர். நாள் முழுவதும் பெறப்படும் லஞ்சத்தொகை மாலையில் அதிகாரிகளிடம் ரொக்கமாகக் குவிந்திருக்கும் எனக் கணக்கிட்டு இந்தச் சோதனை நடத்தப்பட்டதாகத் தெரிகிறது.
சென்னையில் கோடம்பாக்கம், திருவிக நகர், தேனாம்பேட்டை, அண்ணா நகர், ராயபுரம், பெருங்குடி ஆகிய 6 மாநகராட்சி மண்டல அலுவலகங்களில் சோதனை நடத்தப்பட்டது.
இதேபோல் திருச்சி, தூத்துக்குடி, மதுரை, கோவை, புதுக்கோட்டை, கரூர் ஆகிய இடங்களில் மாநகராட்சி மண்டல அலுவலகம், பேரூராட்சி, நகராட்சி, வட்டார வளர்ச்சி அலுவலகங்களில் திடீரென லஞ்ச ஒழிப்புத்துறையினர் நுழைந்து சோதனை நடத்தியதால் அங்கிருந்த ஊழியர்கள் கடும் அதிர்ச்சியடைந்தனர். ஊழியர்கள் லஞ்சமாகப் பெற்ற, கணக்கில் வராத ரொக்கப் பணம் கைப்பற்றப்பட்டது.
ஊழியர்களின் கைப்பேசிகள், வங்கிப் பரிவர்த்தனை விவரங்கள், கணக்குப் புத்தகங்கள், முக்கிய ஆவணங்களை லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.
பறிமுதல் செய்யப்பட்ட தொகைக்கு உரிய ஆவணங்கள், பணம் பெற்றதற்கான காரணம், மின்னிலக்கப் பரிவர்த்தனைகளின் தன்மை குறித்து ஊழியர்களிடம் தொடர் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றும் முறைகேடுகள் உறுதிசெய்யப்பட்டால் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் லஞ்ச ஒழிப்புத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

