குன்னூர்: குன்னூரில் நள்ளிரவில் நாய்கள் துரத்தியதால் காயமின்றி தப்பிக்க நினைத்த கரடி ஒன்று மரத்தில் ஏறி நின்றுகொண்டது. ஆனால், அதனைக் கண்ட மக்கள் அச்சத்தில் தங்கள் தூக்கத்தைத் தொலைத்தனர்.
மலைப்புற மாவட்டமான நீலகிரியில் கடந்த சில ஆண்டுகளாகவே வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகம் இருந்து வருகிறது.
இந்தச் சூழலில், குன்னூர் கக்காச்சி அருகே உள்ள மேல் பாரதி நகர் கிராமத்தில் நள்ளிரவு நேரத்தில் இரண்டு கரடிகள் சுற்றித் திரிந்துள்ளன. இதனைப் பார்த்த தெரு நாய்கள் அவற்றைத் துரத்தியதை அடுத்து, ஒரு கரடி அங்கிருந்து தப்பிவிட்டது.
மற்றொரு கரடி அங்கிருந்த கோயில் முன்பு இருந்த மரத்தின்மீது ஏறி நின்று கொண்டது.
இதுகுறித்து வனத்துறையினருக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர். இரண்டு மணி நேரம் போராடி மரத்தில் இருந்த கரடியை வனத்துறையினர் அங்கிருந்து விரட்டியடித்தனர்.