இந்தியாவின் ஆகப்பெரிய ஊழல் கட்சி பாஜக: கெஜ்ரிவால்

இந்தியாவின் ஆகப்பெரிய ஊழல் கட்சி பாஜக: கெஜ்ரிவால்

1 mins read
e97f1f13-0ba5-4d1a-98c4-83dc744f4b6d
ஸ்டாலினுடன் கெஜ்ரிவால். - படம்: தினத்தந்தி

சென்னை: இந்தியாவில் பாஜகதான் ஆகப்பெரிய ஊழல் கட்சியாக விளங்குகிறது என ஆம் ஆத்மி தலைமை ஒருங்கிணைப்பாளரும் டெல்லி முன்னாள் முதல்வருமான திரு அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சட்டமன்றத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றுவிடக் கூடாது என்பதே தமிழக மக்களின் எண்ணமாக உள்ளது என்றார்.

ஒரேயோர் இடத்தில் பாஜக வெற்றி பெற்றாலும் அக்கட்சியைச் சேர்ந்தவர் தமிழக முதல்வராகப் பதவியேற்பார் என்று எச்சரித்த திரு அரவிந்த் கெஜ்ரிவால், வாரிசு அரசியலை விமர்சிக்கும் பாஜகவினர், தங்கள் பிள்ளைகளை என்ன செய்கிறார்கள் என்பதைப் பார்க்க வேண்டும் என்றார்.

தமிழகத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளில் திமுக அரசு ஏராளமான திட்டங்களைச் செயல்படுத்தி உள்ளதாகவும் இந்திய அளவில் முதல்வர் மு.க. ஸ்டாலினின் குரல் மிகவும் வலிமையானதாகப் பார்க்கப்படுவதாகவும் திரு கெஜ்ரிவால் கூறினார்.

வாக்களித்த ஓராண்டிலேயே டெல்லி பாஜக அரசை மக்கள் வெறுத்துவிட்டதாகக் குறிப்பிட்ட அவர், தமிழகத்தில் பாஜகவுக்கு எந்தவிதமான ஆதரவும் இல்லை என்பதால் அக்கட்சியைக் கண்டுகொள்ளத் தேவையில்லை என்றார்.

தமிழகம் பின்தங்கிவிட்டது: சந்திரபாபு நாயுடு

தமிழகத்தில் கடந்த ஐந்து ஆண்டுகாலத் திமுக ஆட்சியில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை என ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் தகவல் தொழில்நுட்பத்துறை வீழ்ச்சி அடைந்துள்ளதாகக் கோவையில் செய்தியாளர்களிடம் பேசும்போது அவர் குறிப்பிட்டார்.

குறிப்புச் சொற்கள்