சென்னை: செங்குன்றத்தில் உள்ள ஒரு பள்ளிவாசலுக்கு அருகே வெடிகுண்டு இருப்பதாக மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில், வதந்தி பரப்பியதாக 39 வயது ஆடவர் ஒருவரை செங்குன்றம் காவல்துறை அதிகாரிகள் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் 108 ஆம்புலன்ஸ் கட்டுப்பாட்டு அறை செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில் அந்தக் கட்டுப்பாட்டு அறைக்கு புதன்கிழமை வந்த தொலைபேசி அழைப்பில் பேசிய ஒருவர், செங்குன்றம் பாடியநல்லூரில் உள்ள பள்ளிவாசல் அருகே வெடிகுண்டு, நவீன ரக துப்பாக்கிகளைச் சிலர் எடுத்துச் செல்வதாகவும், இதுகுறித்த தகவலை காவல்துறைக்குத் தெரிவிக்குமாறும் கூறிவிட்டு இணைப்பைத் துண்டித்துவிட்டார். இதையடுத்து, ஆம்புலன்ஸ் கட்டுப்பாட்டு அறை ஊழியர்கள் காவல்நிலையத்திற்குத் தகவல் தெரிவித்தனர்.
செங்குன்றம் காவல் நிலைய காவலர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தியதில், அப்படி எந்தச் சம்பவமும் அங்கு நடைபெறவில்லை என்பது தெரியவந்தது.
அதன் அடிப்படையில் செங்குன்றம் பாடியநல்லூர் அருகே உள்ள ஜோதிநகரைச் சேர்ந்த ரா. செல்வம் என்பவர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது தெரியவந்தது. இதையடுத்து காவல்துறையினர், செல்வத்திடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

