சென்னை: வரும் 2036ஆம் ஆண்டுக்குள் 1.5 டிரில்லியன் டாலர் பொருளியல் கொண்ட மாநிலமாகத் தமிழகத்தை மாற்றுவது இலக்கு என்று தமிழ்நாட்டு நிதியமைச்சர் மரிய வில்சன் புதன்கிழமை (ஆகஸ்ட் 5) தெரிவித்தார்.
நடப்பு நிதி ஆண்டுக்கான (2026-27) ரூ. 350027 கோடி வரவுசெலவுத் திட்டத்தை தமிழ்நாட்டு சட்டமன்றத்தில் தாக்கல் செய்து அவர் கிட்டத்தட்ட இரண்டரை மணி நேரம் உரையாற்றினார்.
அண்ணன் சீர், 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நவீன மிதிவண்டிகளுடன் தலைக்கவசம், வெற்றி மடிக்கணினித் திட்டம், நம்பிக்கை இல்லம், 10 ஒலிம்பிக் சிறப்பு மையங்கள், மண்ணின் மகள் திட்டம், ஹஜ் பயணத்துக்கான மானியம் உயர்வு, வீட்டுக் கூரை சூரிய மின் மானியத் திட்டம் உள்ளிட்ட பல திட்டங்களை அறிவித்தார்.
பள்ளிக்கல்வித்துறைக்கு ரூ. 44,527 கோடி, உயர் கல்வித்துறைக்கு ரூ. 8,393 கோடி, சிறப்புத் திட்ட செயலாக்கத் துறைக்கு ரூ. 17,150 கோடி, இளைஞர் நலன், விளையாட்டுத் துறைக்கு ரூ. 1,051 கோடி, சமூக நீதித் துறைக்கு ரூ. 3,937 கோடி, மகளிர் உரிமைத் துறைக்கு ரூ. 9,818 கோடி, மருத்துவத் துறைக்கு ரூ. 23,357 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசின் கடன் இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது. தற்போது அரசின் கடன் ரூ.10 லட்சம் கோடியாக உள்ளது என்று மரிய வில்சன் கூறினார்.
வருவாய்ப் பற்றாக்குறை ரூ. 55,755 கோடியாக இருக்கும். வரி வருவாய் 9.78 விழுக்காடாக வளர்ச்சி அடையும் நிதி நிர்வாகத்தை சீரமைக்க இரண்டு ஆண்டுகள் தேவை என்றார் அவர்.
தவெக அரசு பொறுப்பேற்றது முதல் பழைய திட்டங்களின் பெயர்கள் மாற்றப்பட்டுவந்த நிலையில், தற்போது பெரும்பாலான திட்டங்களுக்கு வெற்றி என்ற பெயர் சேர்க்கப்பட்டுள்ளது.
எடுத்துக்காட்டாக, மாணவர்களுக்கான மடிக்கணினித் திட்டம் தற்போது வெற்றி மடிக்கணினித் திட்டம் என்று மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுபோல வெற்றி வீடு திட்டம் போன்றவையும் இடத்தில் இணைந்துள்ளது.
வரவுசெலவுத் திட்டத்தில் இடம்பெற்ற முக்கிய அறிவிப்புகள்:
* அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கான தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்திற்கு ரூ.560 கோடி ஒதுக்கீடு
* மணமாகும் பெண்களுக்கு 8 கிராம் தங்கம், ஒரு பட்டுப்புடவை வழங்கும் அண்ணன் சீர் திட்டத்துக்கு ரூ.812 கோடி ஒதுக்கீடு.
* மதுரையில் சிறப்பு சட்டக்கல்லூரி.
* 10 ஒலிம்பிக் சிறப்பு மையங்கள் அமைக்க ரூ.50 கோடி நிதி ஒதுக்கீடு
* தமிழகத்தில் 12 மாவட்டங்களில் தலா 1 வீதம் 12 முதியோர் இல்லங்கள் அமைக்க ரூ.6.6 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு.
* அரசுப் பள்ளிகளில் அன்றாடத் தூய்மைப் பணிகள், குடிநீர், கழிப்பறை பராமரிப்பு, 24 மணிநேரப் பாதுகாப்பு. இந்த திட்டத்துக்கு ரூ.139 கோடி ஒதுக்கீடு. காலை உணவுத் திட்டம் 6 - 8ம் வகுப்பு வரை விரிவாக்கம். மொத்தமாக ரூ.710 கோடி ஒதுக்கீடு
* ஆதிதிராவிடர்/பழங்குடி பெண் விவசாயத் தொழிலாளர்களை நில உரிமையாளர்களாக்கும் மண்ணின் மகள் திட்டத்துக்கு 20 கோடி ரூபாய் ஒதுக்கீடு.
* கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரிலிருந்து கர்நாடக மாநிலம் பொம்மசந்திரா வரையிலான மெட்ரோ ரயில் திட்டத்தைச் செயல்படுத்துவதற்கு முன்னெடுப்பு.
* இந்து சமய அறநிலையத் துறைக்கு ரூ708 கோடி ஒதுக்கீடு; 3,000 திருக்கோவில்களுக்கு திருப்பணி- குடமுழுக்கு.
* உள்ளூர் உணவு, கலைப் பண்பாட்டை பிரபலப்படுத்தும் உணவு கலைத் திருவிழாவுக்கு ரூ.20 கோடி ஒதுக்கீடு. மூத்த குடிமக்களுக்கான இலவசப் புனிதப் பயணத் திட்டத்துக்கு ரூ.20 கோடி.
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று சில கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் தவெக ஆட்சி அமைத்தது. கட்சியின் தலைவர் விஜய் முதல்வராக கடந்த மே 10ஆம் தேதி பதவியேற்றார்.
புதிதாக பொறுப்பேற்ற தவெக அரசின் முதல் சட்டப்பேரவைக் கூட்டம் ஆளுநர் உரையுடன் கடந்த ஜூன் 19ஆம் தேதி தொடங்கியது. தொடர்ந்து, நடப்பு நிதி ஆண்டுக்கான (2026-27) பொது வரவுசெலவுத் திட்டம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.


