சென்னை: தாய்லாந்து தலைநகர் பேங்காக்கில் இருந்து சென்னைக்கு வந்த விமானத்தில் பெருமளவில் போதைப்பொருள் கடத்தி வரப்படுவதாகச் சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
அதன்பேரில், சந்தேகத்துக்கு இடமான பயணிகளின் உடமைகளை அதிகாரிகள் தீவிர சோதனைக்கு உட்படுத்தினர்.
அப்போது, வடஇந்தியாவைச் சேர்ந்த இரண்டு பெண் பயணிகளின் பைகளைச் சோதனையிட்டபோது, அதில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 6 கிலோ எடையுள்ள உயர் ரக கஞ்சா கண்டுபிடிக்கப்பட்டுப் பறிமுதல் செய்யப்பட்டது. அனைத்துலகச் சந்தையில் அதன் மதிப்பு ஏறக்குறைய ரூ.6 கோடி இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து, போதைப்பொருளைக் கடத்தி வந்த இரு பெண்களையும் கைது செய்த சுங்கத்துறை அதிகாரிகள், அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இருவருக்கும் அனைத்துலக போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் நேரடித் தொடர்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இவர்கள் யாருக்காக இந்தப் போதைப்பொருளைக் கடத்தி வந்தார்கள், சென்னையில் யாருக்கு விநியோகம் செய்யத் திட்டமிட்டிருந்தார்கள் என்பது குறித்து காவல்துறையினரும் சுங்கத்துறை அதிகாரிகளும் மேலதிக விசாரணைகளை முடுக்கி விட்டுள்ளனர்.


